நம்ம கட்சிக்கு வாங்க: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹாவுக்கு ஐக்கிய ஜனதாதளம் அழைப்பு
பாஜக எம்.பி.யான சத்ருகன் சின்ஹா தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரை புகழ்ந்து பேசினார். இதையடுத்து சத்ருகன் சின்ஹா மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தெரிவித்தது. மேலும் அவர் கட்சியை விட்டு வெளியேறினாலும் தாங்கள் தடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் ஐக்கிய ஜனதாதளத்தின் கதவுகள் சத்ருகன் சின்ஹாவுக்காக எப்பொழுதும் திறந்திருக்கும் என்று நிதிஷ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். சத்ருகன் ஐக்கிய ஜனதாதளத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் சேரலாம். அவ்வாறு வந்தால் அவரை நாங்கள் வரவேற்போம் என்று சஞ்சய் மேலும் தெரிவித்துள்ளார்.
நிதிஷை புகழ்ந்தது குறித்து பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா மற்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பார் ஷாநவாஸ் ஹுசைன் ஆகியோர் நேற்று சின்ஹாவை சந்தித்து பேசினர். இதையடுத்து பாஜகவின் விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பதாக சின்ஹா தெரிவித்துள்ளார்.