7வது நாளாக தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம்! தொடரும் பந்த்!!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா மக்களின் போராட்டம் 7வது நாளை எட்டியுள்ளது. இப்பகுதிகளில் தொடரும் முழு அடைப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடலோ ஆந்திரா, ராயலசீமாவில் இன்று பேருந்துகளும் ஓடவில்லை. கடைகளும் திறக்கப்படவில்லை. ஆனால் போராட்டத்துக்கு மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தெரிவிப்பதால் இப் போராட்டம் வலுத்து வருகிறது.
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒருங்கிணைந்த ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி ஹைதராபாத்தில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஹைதராபாத்தில் மட்டும் 35 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி செய்கின்றனர். இவர்கள் அனைவரும் இன்று 3ஆம் நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர். காங்கிரஸ் தலைவர் சத்திய நாராயணா கடலோர ஆந்திராவை சேர்ந்தவர். அமைச்சர்களும் இப்பகுதியை சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே மாநிலம் பாதிக்கப்படாது என்று நம்பினோம். ஆனால் நாங்கள் மோசம் போய்விட்டோம் என்று தலைமைச் செயலக அரசு ஊழியர் சங்க தலைவர் முரளி கிருஷ்ணா கூறினார்.
மத்திய அரசு தனது முடிவை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை கை விட மாட்டோம் என்றும் அவர் கூறினார். வருகிற 12ந் தேதி முதல் ராயலசீமா, கடலோர அந்திரா பகுதி அரசு ஊழியர்களும் போராட்டத்தில் குதிக்கிறார்கள். மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்காக எத்தனை மாதமானாலும் அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று ஆந்திர பிரதேச அரசு ஊழியர் சங்க தலைவர் அசோக் பாபு கூறியுள்ளார்.
இதனால் மத்திய அரசு கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications