ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா பணியிடை நீக்கத்தை ரத்து கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
டெல்லி: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் மக்கள் நலன் கருதி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், துர்கா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நீதிக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிராகவும், தீய எண்ணத்துடனும் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே துர்காவுக்கு எதிராக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் இதற்கு உத்தரபிரதேச அரசும், மத்திய அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
ஹீரோவாக்காதீர்கள் - அமைச்சர்
ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பாலை ஊடகங்கள் ஹீரோவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக சமாஜ்வாதி கட்சி அமைச்சர் கூறியுள்ளார். மேலும் துர்கா சக்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து உத்தரப் பிரதேச அமைச்சர் அகமது ஹசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியிடை விவகாரத்தை ஊடகங்கள் தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்குகின்றன. அவர் மசூதியை இடித்ததற்காக தண்டிக்கப்பட்டிருப்பவர். அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டியவர். அவருக்காக வரிந்து கட்டிக்கொண்டு வருவதால் ஊடகங்கள் மற்றும் அதிகாரிகளின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகியுள்ளது என்று அகமது ஹசன் கூறியுள்ளார்.
மணீஷ் திவாரி ஆதரவு:
இதனிடையே மணல் கொள்ளையை ஒழித்துக் கட்டியதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்திக்கு ஆதரவு தெரிவித்துள்ள மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி, இது போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டுமே தவிர பணியிடை நீக்கம் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார்.