பாக். தாக்குதல்- மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க சோனியா, ராகுல் வலியுறுத்தல்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் அருகே எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 இந்திய வீரர்கள் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற அப்பட்டமான துரோகத்திற்கு இந்திய தேசம் ஒரு போதும் அடி பணியாது. இது தொடர்பாக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த தாக்குதலில் பலியான வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற ஆத்திரமூட்டும் செயலுக்கு அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.