நடிகை லீனா மரியாபால் காதலன் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை அண்ணாநகர், சேலையூரை சேர்ந்த தொழில் அதிபர்களிடம் 20 கோடி ரூபாய் மோசடி செய்த நடிகை லீனா மரியா பால், அவரது காதலன் சுகாஷ், கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் தொழிலதிபர்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்.
டெல்லியில் தலைமறைவாக இருந்தபோது நடிகை லீனாவை காவல்துறையினர் கைது செய்தனர். அங்கிருந்து தப்பிய சுகாஷ், மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டார்.
பல்வேறு மாநிலங்களில் மோசடி செய்ததாக 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கிய சுகாஷ், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது காதலி லீனா ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந்த நிலையில் சுகாஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை நகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு, புழல் சிறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுகாஷ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.