முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 134 அடியை தாண்டியது!
குமுளி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 134 அடியைத் தாண்டிய நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 152 அடியாகும். ஆனால் அணையில் 136 அடிக்கு மேல் உயர்த்த கேரள மாநில அரசு மறுத்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டமும் உயர்ந்தது. தற்போது அணை நீர்மட்டம் 134 அடியை தாண்டியுள்ளது. அணையில் 136 அடிக்கு மேல் பெருகும் தண்ணீர் மதகு வழியாக இடுக்கி அணைக்கு உபரியாக சென்று விடும்.
இதனால் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்றின் கரையில் அமைந்துள்ள கிராமங்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணை நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து வருவதால் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்திலும் முல்லைப் பெரியாற்றில் கூடுதல் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தேனி மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.