எண்ணெய் பாட்டிலில் கஞ்சாவைத் திணித்து ஆசன வாயில் அடைத்து வந்த கைதி
ஈரோடு: கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு சிறைக்குக் கொண்டு வரப்பட்ட கைதியை சோதனை செய்த போலீஸார் அவரது ஆசன வாயில் திணித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறிய தேங்காய் எண்ணெய் பிளாஸ்டிக் பாட்டில்களை மீட்டனர். அதில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
கோர்ட்டுக்குப் போன இடத்தில் கழிவறையில் வைத்து இந்தக் காரியத்தை செய்துள்ளார் இந்தக் கைதி.
சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாத்துக்கோம்பை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சேட் என்கிற மகபூப் பாஷா. 21 வயதான இவர் கொலை, வழிப்பறி வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேறு ஒரு வழக்குக்காக சேலம் கோர்ட்டுக்குக் கொண்டு போயிருந்தனர். பின்னர் மீண்டும் கோவை திரும்பினர். நள்ளிரவில் கோவை சிறைக்கு வந்து சேர்ந்தனர்.
சிறைக்குள் நுழையும் முன்பு பாஷாவிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாஷாவின் ஆசன வாயில் ஏதோ இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தீவிர சோதனை போட்டபோது, பிளாஸ்டிக் தேங்காய் எண்ணெய் பாட்டில்கள் இரண்டு அங்கு சொருகப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அதை வெளியே எடுத்தனர். உள்ளே திறந்து பார்த்தபோது அதில் தலா 50கிராம் என 100 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து கஞ்சா கடத்தியதாக ஒரு வழக்கைப் போட்டனர் போலீஸார்.