தூத்துக்குடி வைகுண்டராஜன் மணல் குவாரிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
தூத்துக்குடி: மணல் ஏற்றுமதியில் விதிமீறல் நடைபெறுவதாக எழுந்த புகரினை அடுத்து வைகுண்டராஜனின் மணல் குவாரிகளில் வருவாய்த்துறை மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரங்களில் கிடைக்கும் தாது மணலை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழில் செய்து வருபவர் வி. வைகுண்டராஜன். இவர் வி.வி மினரல்ஸ் என்னும் நிறுவத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். குவாரிகளில் இருந்து மணல் ஏற்றுமதி செய்வதில் சமீபகாலமாக விதி மீறல் செய்வதாக வைகுண்டராஜன் மீது புகார்கள் எழ ஆரம்பித்தது.
அதைத்தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமார் உத்தரவின் பேரில், தூத்துக்குடி டி.ஆர்.ஒ., கோவில்பட்டி உதவி கலெக்டர், விளாத்திக்குளம் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்துறையினர், சுங்கத்துறை உதவி இயக்குநர் செல்வசேகர் ஆகியோர் கொண்ட குழு அதிரடியாக களத்தில் இறங்கியது.
இவர்கள், தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் அருகில் உள்ள கலைஞானபுரம், வேம்பார் அருகே பெரியசாமிபுரத்திலுள்ள மணல் குவாரிகளில் விதி மீறல் எதுவும் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். இந்த குழுவினர் தங்களது ஆய்வறிக்கையை கலெக்டரிடம் கொடுக்க இருக்கின்றனர்.
கடந்த பல வருடங்களாக தாது மணல் ஏற்றுமதி செய்துவரும் வைகுண்டராஜனுக்கு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டத்தில் ஆதரவு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மணல் குவாரிகளை குத்தகைக்கு எடுத்துள்ள அளவை விட அதிக அளவில் மணல் எடுத்து ஏற்றுமதி செய்வதாக எழுந்த புகாரினை அடுத்தே இந்த சோதனை நடத்தப்பட்டது. முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதேபோல் மணல்குவாரியில் முறைகேடு செய்த வைகுண்டராஜனின் உறவினர் நடத்தி வரும் பீச் மினரல்ஸ் கம்பெனி நிறுவனத்திற்கு ரூ.3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications