ஓடும் ரெயிலில் 7 வயது சிறுமி பலாத்காரம்: குற்றவாளி பற்றி துப்பு கொடுப்பவருக்கு ரூ.25 ஆயிரம்
சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஓடும் ரயிலில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காமுகன் 10 ரூபாய் கொடுத்து இறக்கி விட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவனை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம், பக்த கன்வாராம் மார்க்கெட் பகுதியில் 7 வயது சிறுமி ரத்தம் வடிந்த நிலையில் மயங்கி கிடப்பதாக கொத்வாலி போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு சட்டீஸ்கர் மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
மயக்கம் தெளிந்த சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் 'ஹவுரா - குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த நான் கழிவறைக்கு சென்றபோது ஒருவன் என்னை பின்தொடர்ந்து வந்து கழிவறைக்குள் வைத்து கற்பழித்தான். பிலாஸ்பூர் ரயில் நிலையத்தில் எனக்கு 10 ரூபாயை தந்து இறக்கி விட்டான்' என்று கூறினாள்.
இதுதொடர்பான வழக்கு தற்போது பிலாஸ்பூர் ரயில்வே நிலைய போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியின் நிலைமை அபாய கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்த ரயில்வே போலீசார் ஹவுரா - குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலின் சி.சி.டி.வி. பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுமியின் பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ரயில்வே போலீசார், 7 வயது சிறுமியை இந்த கதிக்குள்ளாக்கிய காமுகனை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.