'குத்து' ரம்யா உதிர்த்த கண்ணீர் ஓட்டாகுமா? மாண்டியா மாலையிடுமா?
மாண்டியா: காவிரி பிரச்சனையில் முக்கிய பங்கு வகிக்கும் மாண்டியா லோக்சபா தேர்தலில் கண்ணீரும் கம்பலையுமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் நடிகை குத்து ரம்யா கரை சேரவேண்டும் என்பதற்காக ஆளும் காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டி வருகிறது.
மாண்டியா தொகுதியின் எம்.பி.யாக இருந்த சலுவரய்யாசாமி, சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து தற்போது அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகை குத்து ரம்யா போட்டியிடுகிறார். இவர் கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி ஆகிய படங்களில் நடித்தவர்.
இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினரும் கூட. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்கு பரிசாகவே தற்போது லோக்சபா இடைத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ரம்யாவை எதிர்த்து மதசார்பற்ற ஜனதா தளத்தின் புட்டராஜு போட்டியிடுகிறார்.
மாண்டியா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் செல்வாக்கானதாக இருந்தாலும் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவான போராட்டங்களில் தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டவர் ரம்யா.
இதனால் அவருக்கு செல்வாக்கு இருப்பதாக கருதப்படுகிறது. இதனிடையே தேர்தல் பிரசாரத்தின் போது தமது வளர்ப்புத் தந்தையின் மரணம் ரொம்பவே ரம்யாவை பாதித்துவிட மேடையிலேயே கண்ணீர்விட்டு கதறி அழுதார். இது தமக்கு சாதகமாக அமையும் என்று கூட அவர் கருதலாம்.
அதே நேரத்தில் ரம்யாவுக்கும் மாண்டியாவுக்கும் என்ன சம்பந்தம்? என்றெல்லாம் கேட்டு எதிர்க்கட்சிகளும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.