ஆரஞ்சுப் பழம் வருதுன்னு சொன்னாங்களே.. மீத்தேன் சிலிண்டரை அனுப்பியிருக்காங்க??
தூத்துக்குடி: தென்னாப்பிரிக்க ஆரஞ்சுப்பழம் என்ற பெயரில் போலியாக தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியான மீத்தேன் வாயு சிலிண்டர்கள் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துபாய் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வழியாக திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு 24 டன் ஆரஞ்சுப்பழம் இறக்குமதி செய்யப்படுவதாக சுங்கத்துறை ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சம்மந்தப்பட்ட சரக்குபெட்டகத்தை சுங்கத்துறை அதிகாரிகள் எடை பார்த்தபோது அதன் எடையானது 24டன்னுக்கு பதிலாக 29டன்னாக இருந்தது தெரியவந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட சரக்கு பெட்டகத்தை உடைத்து சோதனை செய்தனர். அப்போது அதன் உள்ளே 1729 அட்டைப் பெட்டிகள் இருந்தது.
இதில் 424 அட்டைப் பெட்டிகளில் தென்னாப்ரிக்கா ஆரஞ்சு பழங்களும், மீதமுள்ள 1305 அட்டைப்பெட்டிகளில் 13.6 கிலோ கிராம் எடை கொண்ட மீத்தேன் வாயு சிலிண்டர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 18 லட்ச ரூபாயாகும்.
கார், வீடு உள்ளிட்ட குளிர்சாதன இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் இந்த மீத்தேன் வாயுவை இறக்குமதி செய்திட உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. திருவனந்தபுரத்தில் அந்த நிறுவனம் கொடுத்துள்ள முகவரி போலியானது என்பது சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
போலியான பெயரில் மீத்தேன் வாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்த நபர்களை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர். இதேபோன்று, போலியான உணவுப் பொருள் பெயரில் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியான ஒருகோடி ரூபாய் மதிப்பிலான தென்கொரிய மதுபான பாட்டில்களை சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பறிமுதல் செய்தது குறிப்பிடதக்கதாகும்.












Click it and Unblock the Notifications