சென்னையில் மீண்டும் ஒரு 'பியூட்டிபுல்' மழை...!
சென்னை: உன்னைத் தொட்டு நீ குளிர.. என்னைத் தொட்டு நான் குளிர.. இந்தப் பாட்டுத்தான் இந்த நிமிடத்தில் சென்னை மக்களுக்கு செம பொருத்தம்.. அப்படி ஒரு மழை... !
சுத்தமாக காற்று இல்லை.. விர்ரென்று நிற்காமல் விளாசித் தள்ளி விட்டது மழை.. சென்னையின் பல பகுதிகளில் குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் வெளுத்துக் கட்டிய மழை தற்போது ஓய்ந்துள்ளது.
இந்த செய்தியை அடிக்கும்போதே ஜன்னல் வழியாக வந்து தொட்டுச் சென்றபடி இருந்தது மழைச் சாரல்...
எதிரே நிற்கும் மரத்தின் இலை கூட தெரியாத அளவுக்கு ஒரு புயல் வேக மழை... ஒரு நாள் பிரேக்குக்குப் பின்னர் மத்தியானத்திற்குப் பிறகு புரட்டியெடுக்கும் மழையைப் பார்க்கும்போதே செம சந்தோஷமாக இருந்தது.
மழை 48 மணி நேரத்திற்கு தொடரும் என்று நேற்றுதான் ரமணன் சார் சொல்லியிருந்தார். ஆனால் காலையிலேயே மழை நின்று வெயில் வெள்ளந்தியாக சிரித்துக் கொண்டிருந்து. அடடா.. ரமணன் மேட்டர் ஒர்க் அவுட் ஆயிருச்சே என்று வாய் பிளந்து மக்கள் வருத்தத்தில் மூழ்கிய நேரம் பார்த்து வானம் ஓப்பன் வாகி தலை முதல் உள்ளங்கால் பாதம் வரை குளிர வைத்து விட்டது தற்போது பெய்த மழை....
தாம்பரம் தொடங்கி புறநகரின் பல பகுதிகளில் மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காற்றும் இல்லை என்பதால் மழை அப்படியே ஜில்லென்று பெய்தது.
தற்போது மழை நின்று விட்டபோதிலும் அடுத்த ரவுண்டுக்கு கட்டியம் கூறுவது போல வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகிறது.