தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு: நள்ளிரவு முதல் அமல்

சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 27.5 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. தனியார் பால் 15 லட்சத்து 65 ஆயிரம் லிட்டரும் ஆவின்பால் 11.35 லட்சம் லிட்டரும், விற்பனை செய்யப்படுகின்றன.இந்த நிலையில் தனியார் பால் நிறுவனங்களான டோட்லா, திருமலா, ஜெர்சி, ஹெரிட்டேஜ் போன்ற தனியார் பால் நிறுவனங்கள் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளன.
அவற்றில் தற்போது விலை உயர்த்தியுள்ள பால் நிறுவனங்களின் விற்பனை நாளொன்றுக்கு 10 லிட்டரில் இருந்து 11 லட்சம் வரை உள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் 60 சதவீதம் பால் வீடுகளுக்கு விற்பனையாகின்றன.
கொழுப்பு நீக்கப்பட்ட பால் லிட்டர் ரூ.30-க்கும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.34-க்கும், கொழுப்பு நீக்காத பால் ரூ.38-க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தனியார் பால் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பால் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பால் விலை உயர்த்தப்படவில்லை பழைய விலையே தொடரும்" என கூறப்பட்டுள்ளது.
தனியார் பால் விலை உயருகின்ற போதிலும் ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கூடிய விரைவில் ஆவின் பாலும் விலை உயரலாம். அதிமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது.
முகவர்கள் உண்ணாவிரதம்
பால் விலை உயர்வுக்கு முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:
4 தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்ந்தன் விளைவாக பிற நிறுவனங்களின் பால் விலையும் உயர வாய்ப்புள்ளது. முகவர்களுக்கு சேர வேண்டிய நியாயமான கமிஷன் தொகையை உயர்த்தாமல், பால் விலையை உயர்த்தினால் பொதுமக்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாவர்.
முகவர்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் அளிக்க உள்ளோம். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிடில், காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications