தூத்துக்குடி மணல் குவாரிகளில் இன்று 2வது கட்ட ஆய்வு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த தனியார் கடல் தாது மணல் குவாரிகள் மணல் எடுத்த பகுதிகளில் சிறப்பு ஆய்வுக் குழுவினர் இன்று 2ம் கட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் விவி மினரல், பிஎம்சி உள்ளிட்ட கடல்மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு தமிழக வருவாய்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் வருவாய்த்துறை, சுரங்கத்துறை, சுற்றுச்சூழல்துறை மற்றும் வனத்துறையினர் அடங்கிய சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
இந்த ஆய்வுக்குழுவினர் மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து ஒரு மாதத்திற்குள் ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்பேரில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புஆய்வுக்குழுவினர் கடந்த வாரத்தில் 3நாட்கள் மாவட்டம் முழுவதும் உள்ள கடல்தாது மணல் ஆலைப் பகுதிகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.
முதல்கட்ட ஆய்வுப் பணிகளை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகள் துவங்கியது. இந்தப்பணிகள் இன்றும், நாளையும் நடக்கிறது.
ஆய்வுப்பணிகளுக்கு முன்பாக சிறப்பு ஆய்வுக்குழுவின் தலைவரான தமிழக வருவாய்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி நிருபர்களிடம் பேசுகையில், மாவட்டத்திலுள்ள கடல்தாது மணல் குவாரிகளில் 2ம் கட்ட ஆய்வுப்பணிகள் துவங்கியுள்ளது.
ஆய்வுக் குழுவிலுள்ளவர்கள் ஆய்வு தொடர்பாக வேறு வேறு பகுதிகளுக்கு இடமாறுதல் செய்யப்பட்டு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுமதியின்பேரில் மணல் எடுக்கப்பட்ட பகுதிகள், அனுமதியில்லாமல் மணல் எடுக்கப்பட்ட பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.
அதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கடற்கரையோரங்களிலுள்ள அனைத்து கடல்தாது மணல் குவாரிகளிலும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பெரியதாழை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பணிகளை குழுத்தலைவர் ககன்தீப்சிங்பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.












Click it and Unblock the Notifications