ஸ்பெக்ட்ரம் வழக்கில் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்கிறார் அனில் அம்பானி!
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் பெற ஸ்வான் நிறுவனம் தகுதி அற்றது. முறைகேடாக உரிமம் பெற்றிருக்கிறது என்ற புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் 3 ரிலையன்ஸ் குழும அதிகாரிகளை சிபிஐ கைது செய்தது. இதனால் ஸ்வான் நிறுவனத்தை தொடங்கிய ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி ஆகியோரை சிபிஐ தமது சாட்சியாக சேர்த்தது.
இதை ஏற்று விசாரணை நீதிமன்றம் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி ஆகியோரை ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்த சம்மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனில் அம்பானி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
பின்பு சிபிஐ நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் தாம் ஆகஸ்ட் 15-ந் தேதிக்குப் பின்னர் எந்த தேதியில் வேன்டுமானாலும் ஆஜராக தயார் என்று கூறியிருந்தார்.
இதை ஏற்றுக் கொன்ட சிபிஐ நீதிமன்றம் ஆகஸ்ட் 22-ந் தேதி அனில் அம்பானியும், ஆகஸ்ட் 23-ந் தேதி அவரது மனைவி டினா அம்பானியும் நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க புதிய சம்மன் அனுப்பியது.
ஆனால் திடீரென தாம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அனில் அம்பானி மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இதனால் நாளை அனில் அம்பானி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க இருக்கிறார்.