பதற்றத்தில் அயோத்தி.. தடையை மீறி யாத்திரையை நடத்தப் போவதாக வி.ஹெச்.பி. அறிவிப்பு!
அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசின் தடையை மீறி யாத்திரை நடத்துவோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அறிவித்திருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி, பைசாபாத் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் யாத்திரை ஒன்றை நடத்தப் போவதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. இது தொடர்பாக கடந்த 17-ந் தேதி சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவை அந்த அமைப்பின் தலைவர்கள் நேரில் சென்று பேசினர்.
இருப்பினும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் கருத்தில் கொண்டு யாத்திரைக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். இதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் அசோக் சிங்கால் கூறுகையில், அயோத்தி யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும். உத்தரபிரதேச அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால், அமைதியாக ஜனநாயக வழியில் போராட்டம் நடத்த மக்கள் தயாராக உள்ளனர் என்றார்.
அந்த அமைப்பின் மற்றொரு தலைவரான சாமி சின்மயானந்த், தடையை மீறி திட்டமிட்டபடி ஆகஸ்ட் 25-ந் தேதி யாத்திரை நடைபெறும். சாதுக்களும் ஞானிகளும் யாத்திரையை நடத்துவர். போலீசார் தடுத்தால் சிறைக்குப் போகவும் நாங்கள் தயார் என்றார்.
இதனிடையே பைசாபாத் மாவட்ட நிர்வாகம் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, சட்டம்-ஒழுங்கு காரணங்களுக்காக தடை உத்தரவு விதிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications