மும்பை போட்டோகிராபர் பலாத்கார சம்பவம்.. சபாநாயகர் மீராகுமார் கடும் கண்டனம்!
டெல்லி: மும்பை பெண் போட்டோகிராபர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு சபாநாயகர் மீராகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நாடாளுமன்ற கூட்டத்துக்கு வருகை தந்த போது செய்தியாளர்களிடம் பேசிய மீரா குமார், மும்பை சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.
டெல்லி பலாத்கார சம்பவத்துக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் இத்தகைய குற்றங்களுக்கு எதிராக கடும் தண்டனை வழங்கக் கூடிய மசோதாவை நிறைவேற்றி இருக்கிறோம். அது முழுமையான அளவில் நடைமுறைப்படுத்தப்படும் என நம்பிக்கை கொள்வோம் என்றார்.
பெண்கள் ஆணைய தலைவர் மமதா சர்மா
இதேபோல் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பெண்கள் ஆணைய தலைவர் மமதா சர்மா, மும்பை பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அந்த குற்றவாளிகளுக்கு எதிரான நீதித்துறை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றார்.