காணாமல் போனது 7 பைல்கள் தான் - நிலக்கரி அமைச்சர்!: ஆனால், 225 பைல்கள் என்கிறது சிபிஐ!!
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் காணாமல் போன கோப்புகளின் எண்ணிக்கை தொடர்பாக மீண்டும் மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் இடையே 'பஞ்சாயத்து' எழுந்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கை உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐக்கு தேவையான ஆவணங்களை வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மத்திய அரசோ பல கோப்புகளைக் காணவில்லை என்று கூறி கைவிரித்துவிட்டது.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் 2 சபைகளும் முடங்கியும் போயின. சிபிஐ தரப்பில் காணாமல் போன கோப்புகள் 225 என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்து பேசிய நிலக்கரித்துறை அமைச்சர் ஜெய்ஸ்வால், மொத்தமே 7 கோப்புகள்தான் காணாமல் போனவை என்று ஒரேயடியாக கூறிவிட்டார். அத்துடன் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட 769 கோப்புகளுடன் 26 சிடிக்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றார்.
மேலும் சிபிஐ கோரிய 43 கோப்புகளில் 21 கோப்புகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. 15 கோப்புகள் கைவசம் இருக்கின்றன. 7 கோப்புகள்தான் காணாமல் போயுள்ளன. அவற்றை தேடி வருகிறோம் என்றார். இதனால் மீண்டும் நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் பிரச்சனை வெடித்துள்ளது












Click it and Unblock the Notifications