தூத்துக்குடி துறைமுகத்தில் டிப்பர் லாரிகள் ஸ்டிரைக்
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்லும் டிப்பர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மூலமாக தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட், தனியார் மின் உற்பத்தி நிலையங்கள், ஸ்பிக் உள்ளிட்ட ஆலைகளுக்கு காப்பர் கான்சன்ட்ரேட், நிலக்கரி, சல்பேட் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு அந்நிறுவங்களுக்கு டிப்பர் லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக தூத்துக்குடியில் 600க்கும் மேற்பட்ட கனரக டாரஸ் டிப்பர் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் உட்பகுதியில் இயக்கப்படும் டிப்பர் லாரிகளுக்கு நடை ஒன்றிற்கு ரூ.700 வாடகையாக வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் அந்த லாரிகளில் 40டன் வரை நிலக்கரி ஏற்றப்படுவதாகவும் அதனால் வாடகையை ரூ.700ல் இருந்து ரூ.1500ஆக அதிகரித்து தரவேண்டும் என்று டிப்பர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தனியார் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படும் தாது பொருட்களுக்கு தற்போது டன் ஒன்றிற்கு ரூ.87 முதல் ரூ.135 என்ற அடிப்படையில் தொகை நிர்ணயிக்கப்பட்டும் சரக்கு கட்டணம் வழங்கப்படுகிறது. இதனையும் உயர்த்திதரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.
சரக்குகளை ஏற்றுமதி-இறக்குமதி செய்யும் டிப்பர்லாரிகளுக்கு வாடகை தனியார் சரக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனங்கள் டிப்பர் லாரிகளுக்கு வழங்கவேண்டிய வாடகை தொகையை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் டிரைவர், கிளீனர்களுக்கு உரியநேரத்தில் சம்பளம் வழங்க முடியவில்லை என்று உரிமையாளர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது.
எனவே தனியார் நிறுவனங்கள் வாடகையை பாக்கி இல்லாமல் உடனுக்குடன் தாமதமின்றி வழங்கவேண்டும், தற்போது டீசல் விலை அவ்வப்போது உயர்ந்து வரும் நிலையில் குறைந்தபட்சம் வாடகையை 30சதவீதம் வரை அதிகரித்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றுமதி&இறக்குமதி செய்யும் 600க்கும் மேற்பட்ட டாரஸ் டிப்பர் லாரிகளின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் துறைமுகத்தில் ஏற்றுமதி-இறக்குமதி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள டிப்பர் லாரி உரிமையாளர்களுடன் தனியார் தொழில் நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications