கடல் மணல் தாது மோசடி- விரிவான விசாரணை கோரும் தூத்துக்குடி ஆயர் இவோன் அம்புரோஸ்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த தாதுமணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்வது போன்று நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஆய்வு செய்திடவேண்டும் என்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தென்னக கடற்கரையோரங்களில் கடந்த 20ஆண்டுகளாக சட்ட விரோதமாக கனிமங்களை சுரண்டி கொள்ளையடிக்கும் கும்பல்கள் மற்றும் மணல் நிறுவன உரிமையாளர்களை உடனடியாக கைது செய்திடவேண்டும்.

14-08-2013 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயமானது தமிழகம் மற்றும் கேரள கடற்கரையோரங்களில் மத்திய அரசினுடைய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியின்றி எந்த நிறுவனமும் தாதுமணலை அள்ளக்கூடாது என்று பிறப்பித்த உத்தரவை தமிழகஅரசு உடனடியாக அமல்படுத்திட ஆவண செய்யவேண்டும்.
இனி கடற்கரையோரங்களில் மணல் அள்ளுவதற்கு அரசு எவருக்கும் உரிமம் கொடுக்ககூடாது. மணல் எடுப்பவர்களுக்கு மறைமுகமாக, சாதகமாக செயல்பட்ட அரசு அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்கவேண்டும்.
சேமிப்புகிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மெட்ரிக்டன் தாதுமணலை உடனடியாக பறிமுதல் செய்து அரசு உடைமையாக்கவேண்டும். ஆய்வுக்குழுவினர் மீன்வளத்துறை அதிகாரிகள், பாதிப்பிற்குள்ளாகி வரும் மீனவர்களின் கருத்துக்களையும் அறிவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தாதுமணல் கொள்ளை குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு ஆய்வுக்குழு அமைத்துள்ளது போன்று மணல் கொள்ளையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஆய்வு செய்திடவேண்டும்.
மணலில் இருந்து கனிமங்களை பிரித்தெடுக்கும்போது வெளிப்படும் கதிர்இயக்கத்தால் தோல் வியாதிகள், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. தற்போது கடற்கரையோர மக்கள் இந்த வியாதிகளுக்கு அதிகப்படியாக உட்பட்டு வருவது ஆய்வின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
மறைமாவட்ட முதன்மைகுரு செல்வராஜ், மீனவர் அமைப்புகளின் செயலாளர் லெரின்டீரோஸ் மற்றும் பங்குதந்தையர்கள் உடன் இருந்தனர்.

தனியார் கடல்தாது மணல் குவாரிகளுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட முன்னாள் பிஷப் ஜெயபால்டேவிட் கடந்த 20ம் தேதி ஆய்வுக்குழு தலைவர் ககன்தீப்சிங்பேடியிடம் தனது ஆதரவாளர்களுடன் வந்து மனு கொடுத்தார்.
சி.எஸ்.ஐயின் முன்னாள் பிஷப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்.சி பிஷப் இவோன்அம்புரோஸ் பேட்டி கொடுத்துள்ளது மணல்தாது விவகாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மீனவ ஐக்கிய முன்னணி சார்பில் முன்னாள் பிஷப் ஜெயபால்டேவிட் மற்றும் அவருடன் வந்த சேகர குருக்களை கண்டித்து மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications