கூடங்குளத்தில் அக்டோபரில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி- நாராயணசாமி

டெல்லியில் அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நாராயணசாமி கூறியதாவது:
உலகின் மிகப்பெரிய திட்டம்
மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாபூரில் அமையும் புதிய அணு உலை தொடர்பாக பிரான்ஸ் நாட்டுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய அளவில் 9,900 மெகா வாட் மின்சாரத்தை உருவாக்கும் அணுமின் திட்டமாக அது திகழும். அதை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
கூடங்குளம் அணு உலை
கூடங்குளத்தில் அமைந்துள்ள முதலாவது அணு உலையில் 1,000 மெகா வாட் மின்சார உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் அணு உலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என சிலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். அந்தத் திட்டத்துக்கு எதிராக சில அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி தவறான பிரசாரங்களை மேற்கொண்டன.
இந்நிலையில், அணு உலைத் திட்டம் தொடரலாம் என கடந்த மே 6-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, 1,000 மெகா வாட் மின்சார உற்பத்திக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
400 மெகா வாட் மின்சார உற்பத்தியில் தொடங்கி அக்டோபர் இறுதிக்குள் 1,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனை முதலாவது அணு உலை பெறும்.
கல்பாக்கத்தில் 2014ல்
கல்பாக்கத்தில் புரோட்டோ ரக அதிவேக ஈனுலை (ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர்) அமைக்கும் பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்து விட்டன. 2014-இல் அங்கு ஈனுலை செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் நாராயணசாமி.
கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய அணுசக்தித் துறைச் செயலர் ஆர்.கே. சிங், "அணுமின் உற்பத்திக்கான விலை தொடர்பாக பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.
மேலும், நம் நாட்டில் அணு விபத்து இழப்பீடு சட்டம் அமலில் உள்ளது. அதனால், திட்டத்தை செயல்படுத்தும்போது ஏற்படும் இழப்புகளுக்கு எத்தகைய நிவாரணம் வழங்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது' என்றார்.












Click it and Unblock the Notifications