மும்பை பத்திரிக்கையாளர் பலாத்காரம்… சென்னையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: மும்பையில் பெண் பத்திரிகையாளர் 5 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பையில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் பணியாற்றும் பெண் புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர், நேற்று முன் தினம் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் பொதுமக்களிடையே மட்டுமல்லாது, பத்திரிகையாளர்கள் மத்தியிலும், குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை மட்டுமல்லாது நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிருபர்கள், புகைப்பட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பியதோடு, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியதாக மத்திய அரசையும், மராட்டிய அரசையும் வன்மையாக கண்டித்து முழக்கமிட்டனர். மேலும் பெண்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து 'பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்', 'பத்திரிகையாளர் சுதந்திரத்தை பறிக்காதே' என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதிய அட்டைகளை கையில் ஏந்தியவாறு
பத்திரிகையாளர் மன்றத்திலிருந்து சேப்பாக்கம் மைதானம் வரை அவர்கள்பேரணியாக சென்றனர்.












Click it and Unblock the Notifications