மானாமதுரை அருகே 28 வீடுகள் இடிப்பு: நல்லக்கண்ணு ஆறுதல்…
மானாமதுரை: மானாமதுரை அருகே, ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி, 28 வீடுகளை இடித்த சம்பவம் தொடர்பாக, ஊராட்சி தலைவியின் கணவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், சிறுகுடி ஊராட்சி, பாப்பாங்குளம் கிராமத்தில், ரோட்டோரத்தில் ஆக்கிரமித்து, கட்டியிருந்ததாக, 28 வீடுகள் இடிக்கப்பட்டன. உள்ளாட்சி தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, சிறுகுடி ஊராட்சி பெண் தலைவர், அம்சவள்ளியின் கணவர் தங்கராஜ் ஏற்பாட்டில் தான், இந்த வீடுகள் இடிக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டோர், மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர், பீமராவ் எம்.எல்.ஏ., தலைமையில், கலெக்டர் ராஜாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் புகார் கொடுத்தனர். சம்பவ இடத்தை எஸ்.பி., நேற்று ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டோரில் ஒருவரான சுப்பிரமணியன் என்பவரின் புகாரின் படி, ஊராட்சி தலைவர் அம்சவள்ளியின் கணவர் தங்கராஜ் மீது, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகளை இடித்து சேதப்படுத்தியதாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வன்கொடுமை சட்டத்தில், தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நல்லக்கண்ணு ஆறுதல்
வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் பத்திரிக்கைகளில் வெளியானவுடன் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் குதித்து விட்டனர். சிபிஐயின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தொகுதி எம்எல்ஏ குணசேகரன்(சிபிஐ), முன்னாள் எம்எல்ஏ தங்கமணி, ஒன்றிய செயலாளர் முத்தையா உள்ளிட்டோர் இன்று காலை 11மணிக்கு பாதிக்கப்பட்ட கிராமமக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று தலித் வீடுகளை திட்டமிட்டு இடித்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டா வாங்கி வீட்டு வரி செலுத்தி முறையாக குடியிருந்து வருபவர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி வீடுகளை இடித்துள்ளார். இதற்கு போலீசாரும் உடந்தையாக இருந்துள்ளனர். போலீஸ் பாதுகாப்பு இல்லையென்றால் அவர் வீடுகளை இடித்திருக்க மாட்டார், போலீசார் அத்து மீறி செயல்பட்டு உள்ளனர், ஆக்ரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை சார்பில் அளவீடு செய்ய வேண்டும், ஆக்ரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும், இந்த விதிகளை பின்பற்றாமல் வீடுகளை தன்னிச்சையாக இடித்துள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், வன்கொடுமை சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 5லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், இடிபட்ட வீடுகளுக்கு பதிலாக அரசே வீடு கட்டி தரவேண்டும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

போலீஸ் மீது குற்றச்சாட்டு
போலீசின் தவறான துஷ்பிரயோகம் காரணமாக தான் வீடுகள் இடிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டினார் நல்லகண்ணு. பாதிக்கப்பட்ட மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளியின் கணவர் தங்கராசுதான் காரணம் என்று கூறினார்களே என்று கேட்டதற்கு போலீஸ் இந்த இடத்தில் இல்லையென்றால் அவரால் வீடுகளை இடிக்க முடியுமா என திருப்பி கேள்வி எழுப்பினார். முதல் நாள் மட்டும்தானே டிஎஸ்பி வெள்ளத்துரை வந்தார் மறுநாள் போலீசே இல்லையே, போலீஸ் இல்லாமல்தானே வீடுகளை இடித்துள்ளார் என்று கேட்டதற்கு முதல்நாளே போலீசார் தைரியம் கொடுத்துவிட்டார்கள் அதனால்தான் இடித்துள்ளார் என்று பதிலளித்துள்ளார். பின் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் கட்சி பேதமின்றி டிஎஸ்பியை குற்றம் சாட்டி பேசினர்.












Click it and Unblock the Notifications