ஆபிசிற்கு லீவு… தன்னைத்தானே கட்டிப் போட்டு நாடகமாடிய ஜப்பான் பெண்
டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோவில் இளம் பெண் ஒருவர் தன்னைத்தானே கட்டிப் போட்டுக் கொண்டு வீட்டில் அபாயகரமான நிலையில் மீட்கப் பட்டார்.
20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், தலைநகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், கடந்த திங்கள் அன்று தன் கால்களையும் கைகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு, அபாயகரமான நிலையில் இருந்துள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளர், இதைக் கண்டுவிட்டு, போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளார். போலீஸார் ஆம்புலன்ஸை வரவழைத்து, பெண்ணைக் காப்பாற்றினர்.
அப்போது, அந்தப் பெண்ணைக் கட்டிப் போட்டு வீட்டில் ஏதேனும் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீஸார் வீட்டை முழுவதுமாக சோதனையிட்டனர். ஆனால் அவ்வாறு எதுவும் தெரியவில்லை.
அந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சுய நினைவு திரும்பிய அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்தப் பெண், அன்றைய தினம் தனக்கு வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லை என்றும், முன்னறிவிப்பு அளிக்காமல் விடுப்பு கிடைப்பதற்கு வேறு வழி தெரியாமல் இவ்வாறு செய்ததாகவும் தெரியவந்தது.
இருப்பினும், அந்தப் பெண்ணின் நிலையைக் கருதி அவர் மீது எந்த நடவடிக்கையும் போலீஸார் மேற்கொள்ளவில்லை. இந்த செய்தி ஜப்பான் ஊடகங்களில் பரபரப்பு செய்தியாக வெளியானது.