உணவு பாதுகாப்பு மசோதா அல்ல.. ஓட்டு பாதுகாப்பு மசோதா: முரளி மனோகர் ஜோஷி
லோக்சபாவில் உணவு பாதுகாப்பு மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய முரளி மனோகர் ஜோஷி, இந்த மசோதாவை உருவாக்க 4 ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. 2009ஆம் ஆண்டே இந்த மசோதா கொண்டுவருவோம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதி அளித்தது.
தற்போது நான்கரை ஆண்டுகாலம் கழித்து கொண்டு வந்துள்ளனர். அப்படியானால் இந்த நான்கரை ஆண்டுகாலம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இது உணவு பாதுகாப்பு மசோதா அல்ல. வாக்காளர்களை கவருவதற்கான பாதுகாப்பு மசோதா. இது தேர்தலுக்கான மசோதா என்றார்.
முன்னதாக பேசிய இடதுசாரி தலைவர் பிரபோத் பாண்டா, மத்திய அரசின் இந்த மசோதாவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. இம்மசோதாவை நிராகரிக்கக் கோரி நாங்கள் தனி தீர்மானம் கொண்டுவர உள்ளோம். இது உணவு பாதுகாப்பு மசோதா அல்ல.. இதை நீங்கள் ஏழைகளுக்கான உணவு உத்திரவாத மசோதா என்று அழைத்தால் கூட புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த மசோதா உணவு பாதுகாப்பு தொடர்பான எந்த ஒரு அம்சத்தையுமே கொண்டிருக்கவில்லை என்றார்.