இந்தியாவில் யானைகள் தாக்கி ஆண்டுக்கு 200 பேர் மரணம்... அதிர்ச்சி தகவல்
நீலகிரி: இந்தியாவில் ஆண்டுக்கு 200 பேர் வரை யானை தாக்குதலால் உயிரிழக்கின்றனர் என்று உலக உலக வனவிலங்குகள் நிதியத்தின் (டபிள்யு.டபிள்யு.எஃப்.) ஆய்வில் தெரியவந்துள்ளது.
இன்றைக்கு ஊடகங்களில் அதிகம் இடம் பெறும் செய்தி யானைகள், வனவிலங்குகளைப் பற்றியதாகத்தான் இருக்கிறது. வனவிலங்குகளால் மனிதர்களுக்கும், மனிதர்களால் வனவிலங்குகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
"ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை சூழல் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், "மேற்கு தொடர் மலை நீலகிரி பகுதியில் புலிகள் மற்றும் யானைகளை கண்காணித்தல்' என்ற தலைப்பில் உலக வனவிலங்குகள் நிதியத்தின் மேற்கு தொடர்ச்சி மலை திட்ட ஒருங்கிணைப்பாளர் து.பூமிநாதன் பேசியதவாவது:

புலிகள் கண்காணிப்பு
வனப்பகுதிகளில் உள்ள யானைகள், புலிகளை கண்காணிப்பதில் அறிவியல் எப்படி உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். பொதுவாக அறிவியல் உதவியுடன் யானைகளை ரேடியோ காலர் மூலமாகவும், புலிகளை நவீன கேமிராக்கள் மூலமும் கண்காணித்து, அதன் எண்ணிக்கையைக் கணக்கிடுகிறோம். இத்துடன் நேரடி கள ஆய்வு மூலமும் அதனை கண்காணிக்கிறோம்.

யானைகள் விகிதாச்சாரம்
முதுமலை, பந்திப்பூர், வயநாடு பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யானைகளில் ஆண்-பெண் விகிதாசாரமும் சரியாக இருக்க வேண்டும். அப்போது தான் யானைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ரேடியோ காலர்
பவானி ஆற்றாங்கரையோரங்களில் வாழைகளை பயிரிடுவதால், நீர் அருந்த வரும் யானைகள் வாழைகளை சேதம் செய்கின்றன. கோவையில் யானைகளை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் ஒரு யானை இறந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

அண்டை மாநிலங்களில்
ஆனால், தமிழகம் தவிர்த்து கர்நாடகம், கேரளத்தில் ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியால் யானைகள் சிறப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

200 பேர் வரை உயிரிழப்பு
இந்தியாவில் ஓராண்டுக்கு 200 பேர் வரை யானை தாக்குதலில் உயிரிழக்கின்றனர். அதேநேரத்தில், சுமார் 150 யானைகள் இறந்து போகின்றன. இதில் 50 யானைகள் மின்சாரம் தாக்கி இறக்கின்றன.
யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க கிராமங்களில் மின்வேலி கண்காணிப்புக் குழு அமைத்து வருகிறோம். இதனால், கிராம மக்கள் ஒத்துழைப்புடன் சில இடங்களில் விளைநிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் யானைகள் நுழைவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மின் வேலி
சில இடங்களில் அகழிகளை கூட யானைகள் எளிதாக கடந்து வருகின்றன. யானைகள் வனப்பகுதியை விட்டு வெளிவர முடியாத அளவுக்கு அகழிகளை அமைக்க வேண்டும். அத்துடன் அகழியையொட்டி மின் வேலி அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றார்.

கண்காணிப்பு அவசியம்
மின்வேலி அமைப்பது மட்டுமில்லாமல் தொடர் கண்காணிப்பு அவசியம். யானை உள்ளிட்ட விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளிவருவதை சென்சார் உதவியுடன் எச்சரிக்கை எழுப்பும் மணியைப் பொருத்தி கண்காணிப்பு செய்து வருகிறோம்.

6 யானைகள்
கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளில் சுற்றித்திரியும் 6 யானைகளை இடம் மாற்றுவது இயலாத காரியமாகும். அதே இடத்தில் பிறந்து வாழ்ந்த அந்த யானைகளை பிற இடங்களுக்கு இடமாற்றுவது சிரமமான விஷயமாகும்.

விலங்குகள் விழிப்புணர்வு
யாருமே கண்டுகொள்ளாத நிலையில் இருந்த சத்தியமங்கலத்தில், விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் மாட்டு கொட்டகைகளை வைத்திருந்தனர். இதை புலிகள் வேட்டையாடின. மீதமுள்ள மாமிசத்தில் விஷத்தை வைத்து புலிகளை கொன்றனர். அந்த மாமிசத்தைச் சாப்பிட்ட அரிய வகை கழுகுகள், கழுதைப்புலி உள்ளிட்டவையும் இறந்து போயின.

புலிகள் எண்ணிக்கை
இதைத் தடுத்து விவசாயிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்து, வருவாய் பெற்று வருகின்றனர். இதனால், அங்கு விஷம் வைத்து புலிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications