ஒரு ரவுடியும், சில நண்பர்களும்... மப்பு.. தகராறு.. கழுத்தை அறுத்து ஒரு கொலை!
தூத்துக்குடி: மதுபோதை தகராறில் நண்பனை நண்பர்களே கழுத்தை அறுத்து கொலை செய்து, பிணத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கோரச் சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் காளிமுத்து (22). பட்டதாரியான இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சரத், ராஜாமணி, சங்கர் என நண்பர்கள் இருந்தனர். சரத் ஓம்சக்தி நகரில் தனது தந்தையுடன் குடியிருந்து வந்தார்.
சரத் வீட்டில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று போலீசாருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. சரத் ஏற்கனவே பிரபல ரவுடி என்பதால் அவரது வீட்டிற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு யாரும் இல்லாத நிலையில் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது.
இதனையடுத்து மாயமான சரத்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி கேவிகே நகர் காட்டுப்பகுதியில் வாலிபர் ஒருவர் உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநேரத்தில் தலைமறைவாக இருந்த சரத் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் பகுதியில் தனிப்படை போலீசாரிடம் சிக்கினான்.
அதனைத்தொடர்ந்து போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையில், உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்க்கப்பட்டவர் சரத்தின் நண்பர் காளிமுத்து என்பது தெரியவந்தது. கடந்தாண்டு நடந்த ஒரு விழாவின் கொண்டாட்டத்தின்போது காளிமுத்துவிற்கும் அவரது நண்பர் ராஜாமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் பிரிந்துவிட்டனர். காளிமுத்துவையும், ராஜாமணியையும் சரத் மற்றும் அவரது நண்பர்கள் மீண்டும் சேர்த்து வைத்துள்ளனர். இதனை கொண்டாடும் வகையில் சரத் வீட்டில் வைத்து நண்பர்கள் அனைவரும் நேற்று இரவு மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் காளிமுத்துவிற்கும், ராஜாமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து போதையில் இருந்த காளிமுத்துவை சரத் உள்ளிட்ட நண்பர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக காட்டுப்பகுதியில் கொண்டுசென்று எரித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கொலைகார நண்பர்களை தேடி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்ட கொலை சம்பவத்தில் சரத் முக்கிய குற்றவாளியாவார். ஏற்கனவே இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்து மதுபோதையில் நண்பனை சகநண்பர்களே கழுத்தை அறுத்து கொலைசெய்து, பிணத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.