டீயோடு சாராயம் விற்ற 'மொபைல்' ஒயின்ஷாப் ஓனர் கைது!
சென்னை: சென்னையில், மோட்டார்சைக்கிளில் வைத்து டீ விற்பவர் போல் சாராயம் விற்று வந்த 46 வயது வியாபாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மொபைல் டீ ஷாப், டிபன் சென்டர் கேள்விப்பட்டிருப்பீங்க. மொபைல் ஒயின்ஷாப் பத்தித் தெரியுமா உங்களுக்கு?
50 சாராய பாட்டில்களுடன் நடமாடும் ஒயின்ஷாப் நடத்திவந்த நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர் திருவள்ளூர் போலீசார். டாஸ்மாக்கில் கால் கடுக்க நின்று சரக்கு வாங்க கஷ்டப்படும் குடிமக்களின் வசதிக்காக வீட்டிற்கே சென்று சரக்கு வழங்கும் உயர்ந்த சேவையைச் செய்து வந்துள்ளார் இவர்.
பார்ப்பதற்கு டீ விற்பவர் போன்ற தோரணையில் மோட்டார் சைக்கிளில் பிளாக்ஸ் மற்றும் பேப்பர் கப்புகளுடன் சென்னை நயப்பாக்கம் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி அலைந்துள்ளார் பாபு என்ற 46 வயது மனிதர்.
சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்த போது தான் பாபுவின் சுயரூபம் வெளிவந்துள்ளது. விதவிதமான சரக்கு பாட்டில்கள், டம்ளர்கள், இதர இத்யாதிகளுடன் சுற்றி வந்த பாபுவின் முக்கிய வாடிக்கையாளர்களே கட்டிடப் பணியாளர்கள் தானாம்.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக தனது மொபைல் போன் நம்பரை கொடுத்துள்ள பாபு, வார இறுதி நாட்களில் சந்தை விலையை விட அதிக விலை வைத்து சரக்கை விற்பனை செய்வாராம். பாரில் விற்பதை விட பாபுவிடம் வாட்டர் பாக்கெட், பிளாஸ்டிக் கிளாஸ் என எல்லாவற்றின் விலையுமே அதிகம் தானாம்.
தற்போது பாபுவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.