ஜெகன் சொத்து குவிப்பு வழக்கு- ஆந்திரா அமைச்சரிடம் சிபிஐ விசாரணை
ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஆந்திரா பெருந் தொழில்கள் துறை அமைச்சர் கீதா ரெட்டியிடம் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, ஆந்திரா முதல்வராக இருந்த போது சட்டவிரோதமாக வருமானத்துக்கு அதிகமாக ஜெகன் மோகன் ரெட்டி சொத்துகுவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ஜெகன் சிறையில் இருக்கிறார்.
தற்போது தெலுங்கானா விவகாரத்தில் கடந்த 4 நாட்களாக ஜெகன் சிறையில் சாகும் வரையிலான உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் அமைச்சர் கீதா ரெட்டியிடம் ஜெகன் சொத்து குவிப்பு பற்றி விசாரணை நடத்தி இருக்கின்றனர். அனந்தபூர் மாவட்டம் லெபாக்சி அறிவுசார் பூங்காவுக்கான நில ஒதுக்கீடு பற்றி கீதா ரெட்டியிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி கேட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்து குவிப்பு வழக்கில் சிபிஐயால் விசாரிக்கப்படுகிற 5வது அமைச்சர் கீதா ரெட்டி. கடந்த ஆண்டு ஜெகன் வழக்கில் 6 ஆந்திர அமைச்சர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதில் மூவர் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. ஒரு அமைச்சர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.