இடதுசாரிகளின் மாற்று அரசியல் இயக்கத்தில் அதிமுக இணைய பிரகாஷ் காரத் அழைப்பு!
சென்னை: காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி அல்லாத மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கங்களை ஒருங்கிணைக்கும் மாற்று அரசியல் அவசியம் என்றும் இதில் அதிமுக இணைந்து கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இடதுசாரிகள் இயக்கங்கள் சார்பாக மாற்றுப் பாதைக்கான அகில இந்திய பிரசார தொடக்கப் பொதுக்கூட்டம் சென்னை ஓட்டேரியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேசுகையில்,

2009-இல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸும் பாஜகவும் சேர்ந்து 48% வாக்குகள்தான் பெற்றன. எஞ்சிய 52% மக்கள் காங்கிரஸ், பாஜகவை ஆதரிக்கவில்லை என்பது தெரிகிறது.
இந்த இரண்டு கட்சிகளுக்கு எதிரான ஒரு மாற்றம் வர வேண்டும் என விரும்பும் மக்களையும், அந்த மக்களைத் தலைமை தாங்கும் இயக்கங்களையும் அணி திரட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
இந்தத் அணி திரட்டல் மூலம் ஓர் அரசியல் மாற்றை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம். மாற்றுக் கொள்கை எனும் எங்கள் இலக்கை நோக்கி காங்கிரஸ், பாஜக அல்லாத பல்வேறு கட்சிகள் வரவேண்டும் என்று இடதுசாரிகள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம்.
காங்கிரஸ் - பாஜக அல்லாத மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கங்களை ஒருங்கிணைத்து மாற்று அரசியல் காணுவோம். இந்த மாற்று அரசியலில் அதிமுகவும் இணைந்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications