கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் பறவைகளுக்கு பாதிப்பில்லையா?
மாஸ்கோ: கூடங்குளம் அணுமின்நிலையத்தினால் அங்குள்ள பறவைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அரிய வகை பறவையினங்கள் கூடுகட்டத் தொடங்கியுள்ளதாகவும் அணு மின் நிலையம் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூடங்குளம் அணுமின்நிலையத்தினால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் என்று கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீன்களை பிடிக்க முடியாது. பறவைகள் கூட உயிர்வாழக்கூடிய சூழ்நிலையை இழந்து வருகின்றன என்பது போராட்டக்குழுவினரின் குற்றச்சாட்டு.

கூந்தக்குளம் சரணாலயம்
கூடங்குளத்திலிருந்து வெறும் 20 கி.மீ. தொலைவில்தான் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் உள்ளது. கூந்தங்குளம் உலகின் முக்கிய பறவை சரணாலயங்களில் ஒன்று. கூந்தங்குளம் என்று பெயரளவில் அழைக்கப்பட்டாலும் இப்பறவைகள் சரணாலயம் கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி வரை விரிந்து பரவியுள்ளது.
230க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டுவதாக பறவையியல் அறிஞர்கள் கணக்கெடுத்துள்ளனர். நாங்குநேரி அருகிலுள்ள கூந்தங்குளத்தைச் சுற்றிலும் 150க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.

பறவைகளின் காவலர்கள்
நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊருக்கு பறவைகள் வந்து செல்வதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பறவைகளின் வாழ்க்கைக்கு இம்மக்கள் சிறிய தொந்தரவைக்கூட செய்வதில்லை. தீபாவளிப் போன்ற பண்டிகை நாட்களில்கூட இங்கு பட்டாசு வெடிப்பதில்லை. யாரும் வேட்டையாடக் கூடாது. பறவை வேட்டையாடுபவர்கள் யாராவது தென்பட்டால் இந்த ஊர் மக்கள் கடுமையான தண்டனை தருகிறார்கள்.

அணுமின்நிலையத்தால் அழிவு
ஆனால் கூடங்குளம் அணுமின்நிலைய பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பறவைகள் வரத்து படிப்படியாக குறைந்து போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடங்குளம் அணுஉலை அமைந்துள்ள பகுதியில் சில அரியவகை பறவைகள் இறந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
கூடங்குளம் அணுஉலையின் 13 ராட்சத மின்கேபிள்கள் கூந்தங்குளம் வழியாக செல்ல உள்ளன. இது பறவையினங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தினை ஏற்படுத்தக்கூடியது என்று இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

கூடு கட்டுவதாக தகவல்
ஆனால் அணுமின்நிலையத்தினால் எந்த வித பாதிப்பும் இல்லை என்றும், அரியவகை பிலிக்கான் பறவைகள் கூட கூடங்குளம் அணுமின்நிலையத்தைச் சுற்றி கூடு கட்டுகின்றன என்றும் தகவல் வெளியிட்டுள்ளனர் அணுமின்நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.

சுற்றுச்சூழல் பாதிப்பில்லை
கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள புதர்களில் தற்போது 40க்கும் மேற்பட்ட சாம்பல் நிற பிலிக்கான் பறவைகள் கூடுகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது அந்த அறிக்கை.

பறவைகளுக்கு பாதிப்பு
கூடங்குளம் அணுமின்நிலையத்தின் அருகில் உள்ள நீர் நிலைகளில் உள்ள மீன்களை உண்டுதான் இந்த பறவைகள் உயிர்வாழவேண்டும். அதனால் அணுக்கதிர்வீச்சுக்கு இந்த பறவைகள் ஆளாக நேரிடும் என்பது பறவைகள் ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.












Click it and Unblock the Notifications