மெத்தை, ஸ்பெஷல் உணவு, குளிக்க கங்கை நீர்: சிறையில் ஆசாராம் பாபுவுக்கு ராஜ மரியாதை தான்
ஜோத்பூர்: பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதகுரு ஆசாராம் பாபுவுக்கு சிறையில் ராஜ மரியாதை அளிக்கப்படுகிறதாம்.
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள மதகுருவான ஆசாராம் பாபு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு கட்டில், மெத்தை அளித்துள்ளார்களாம். மேலும் சிறை அதிகாரிகளின் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்படும் உணவை தான் அவர் சாப்பிடுகிறாராம்.
ஆசாராம் பாபுவை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட 2 பேர் அவருக்கு பணிவிடை செய்கிறார்களாம். மேலும் அவரது வேண்டுகோளின்படி அவர் குளிக்க கங்கை நீர் கொடுக்கப்படுகிறதாம்.
ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கி படித்த 16 வயது சிறுமி அளித்த பாலியல் புகாரில் அவர் இந்தூரில் வைத்து கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற கைதிகள் சிறையில் சமைக்கப்படும் உணவை சாப்பிட்டு தரையில் தூங்கும்போது ஆசாராம் பாபுவுக்கு மட்டும் கட்டில், மெத்தை, சிறப்பு உணவு வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.