''ஒந்து ரூபா கொடி''... 10 லிட்டர் நீரைப் பிடி...!!
பெங்களூர்: நமக்குத்தான் கர்நாடகம் சரியாக தண்ணீர் தர மாட்டேன் என்கிறது. ஆனால் பெங்களூர் புறநகர் வாசிகளுக்கு தாராளமாக தண்ணீர் சப்ளை ஆகிறது. அதுவும் 10 லிட்டர் தண்ணீர் ஒரு ரூபாய் என்ற சகாய விலையில்.
ஒருபக்கம் பொருளாதாரம் தட்டுத்தடுமாறி டண்டணக்கா டான்ஸ் ஆடி வந்தாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வந்தாலும் கூட இப்படி மிகக் குறைந்த விலைக்கு பாதுகாக்கப்பட் குடிநீர் சப்ளை ஆவது பெங்களூர் ஊரகப் பகுதியான கனகபுரா மக்களை குஷிப்படுத்துவதாக உள்ளது.
அதை விட முக்கியமாக இந்தத் தண்ணீரைப் பிடிக்க பெண்களிடையே குடுமிபிடி மற்றும் சவுரிபிடி சண்டையெல்லாம் கிடையாது. மிகவும் சவுகரியமான முறையில் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

வாட்டர் ஏடிஎம்...
பணத்திற்கு மட்டும்தானா ஏடிஎம்... பெங்களூர் புறநகர்வாசிகளுக்காகவே இந்த வாட்டர் ஏடிஎம்மை ஏற்பாடு செய்துள்ளனர் காங்கிரஸைச் சேர்ந்த டிகே.சிவக்குமார், சுரேஷ். மக்கள் இதை வாட்டர் ஏடிஎம் என்றுதான் செல்லமாக கூறுகின்றனர்.

ஜெயாம்மா சொல்வதைக் கேளுங்க...
கனகபுரா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஜெயாம்மா என்பவர் கூறுகையில், தண்ணீர் நல்லா இருக்கு.. முன்னாடியெல்லாம் போர்வெல் தண்ணீர்தான் பயன்படுத்தினோம். ஆனால் இப்போது இந்த தண்ணீர் தாராளமாக கிடைக்கிறது. குடிக்க சுவையாக இருக்கிறது. எங்க வீட்டில் ஐந்து பேர். எங்களுக்கு ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அது இப்போது தாராளமாக கிடைக்கிறது.. 2 ரூபாய்தான் செலவாகிறது என்றார் மகிழ்ச்சியுடன்.

காசைப் போட்டா. கடகடவென தண்ணீர் வரும்
நிறைய ஊர்களில் குழாய்களில் தண்ணீருக்குப் பதில் காற்றுதான் புசுபுசவென்று வரும். ஆனால் இந்த வாட்டர் ஏடிஎம்மில், ஒரு ரூபாய் நாணயத்தைச் சொருகினால் போதும் 10 லிட்டர் தண்ணீர் கடகடவென வருகிறது. நிமிஷத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டு நிம்மதியாக வீடு போய்ச் சேரலாம்.

33 தண்ணீர் தொட்டிகள்
இதுபோல காசு கொடுத்தால் தண்ணீர் தரும் கயாஸ்க்குகள் மொத்தம் 33 இடங்களில் வைக்கப்பட்டுள்ளனவாம். ஒவ்வொரு கயாஸ்க்கும் ரூ. 13 லட்சம் செலவில் வைக்கப்பட்டுள்ளதாம்.

அண்ணன் சுரேஷ்.. அண்ணன் சிவா..
கனகபுரா நாடாளுமன்றத் தொகுதியில்தான் இந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது. இதைச் செய்த பெருமைக்குரியவர்கள் இத்தொகுதியின் எம்.பியான டி.கே.சுரேஷ் மற்றும் எம்.எல்.ஏவான டி.கே. சிவக்குமார். இருவரும் அண்ணன் தம்பிகள் ஆவர். இருவருமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

தண்ணீரின் பெயரில் ஜெயித்தவர்
கனகபுரா தொகுதிக்கு நடந்த லோக்சபா இடைத் தேர்தலில் இதுபோல தண்ணீர் கயாஸ்க்குகள் வைப்பதாக உறுதியளித்திருந்தார் சுரேஷ். அதை நம்பி மக்களும் வாக்களித்தனர். தற்போது சொன்ன சொல்லை மீறாமல், வைத்து பட்டையைக் கிளப்பி விட்டார் சுரேஷ்.

ஏன் குடிக்கக் கூடாது...
இந்தத் தண்ணீர் மெஷின்கள் குறித்து சிவக்குமார் கூறுகையில், பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் என விஐபிக்கள் மட்டுமத்தான் மினரல் வாட்டர் குடிக்க வேண்டுமா.. சாதாரண மக்கள் குடிக்கக் கூடாது. இந்த எண்ணத்தில் உருவானதுதான் இந்த தண்ணீர் மெஷின்கள். மக்கள் இதை பெருத்த உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். தற்போது பாதுகாக்கப்பட்ட தண்ணீர் மக்களுக்குக் கிடைத்துள்ளது, அதுவும் குறைந்த கட்டணத்தில் என்றார்.
தண்ணீர் தொடர்ந்து வருதோ இல்லையோ.. கண்டிப்பா இந்த அண்ணன் தம்பிக்கு ஓட்டு தவறாமல் கிடைத்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை... 'என்ஜாய் மாடி குரு'!.












Click it and Unblock the Notifications