கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மாடு... கயிற்றைக் கட்டி வெளியே தூக்கிய தீயணைப்பு வீரர்கள்
காயல்பட்டணம்: தூத்துக்குடி அருகேயுள்ள காயல்பட்டணத்தில் தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டினை திருச்செந்தூர் தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
கிணற்றிலிருந்து மீண்டு வந்த மாட்டின் கண்களில் கண்ணீர் வந்ததைப் பார்த்து கூடியிருந்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.
அதிர்ஷ்டவசமாக கிணறு ஆழம் இல்லாததாலும், உயரம் குறைந்திருந்ததாலும் பசு மாட்டை மீட்பது எளிதாக இருந்தது.
காயல்பட்டம் திருவள்ளுவர் தெரு
காயல்பட்டிணம் திருவள்ளுவர் தெரு பகுதியில் அமைந்துள்ள சுண்ணாம்புத்திரடு பகுதியில் இரண்டு கிணறுகள் உள்ளன. தெருவின் ஓரத்திலுள்ள 2கிணறுகளில் தரைமட்ட கிணறானது பயன்பாடற்ற பாழடைந்த கிணறாகும்.
தவறி விழுந்த பசு மாடு
நேற்று மாலை இப்பகுதியில் ஏராளமான மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. இதில் தரைமட்ட கிணறு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று தரைமட்ட கிணற்றின் உள்ளே எதிர்பாராதவிதமாக திடீரென்று தவறி விழுந்துவிட்டது. உள்ளே விழுந்த பசுவின் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கயிறு கட்டி தூக்கினர்
அதன்பின்னர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்றாக இணைந்து கயிற்றை இழுத்து பசுமாட்டினை வெளியே தூக்கினர். இப்படியாக பசு மாடு பத்திரமாக மீட்க்கப்பட்டது.
காலில் அடி
கிணற்றின் உள்ளே விழுந்த வேகத்தில் பசுவின் காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு, ரத்தக்காயம் ஏற்பட்டு இருந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் பசுமாட்டிற்கு சிகிச்சை அளித்திட கால்நடைத்துறை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். கிணற்றில் இருந்து மீட்க்கப்பட்ட பசு மாடு கண்ணீருடன் நன்றி தெரிவிக்கும் வகையில் அதன் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து கொண்டே இருந்தது. இது அப்பகுதி மக்களை நெகிழ வைத்தது.