டெய்லி நீந்திப் போய் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் சூப்பர் வாத்தியார்!

கழுத்தளவு உள்ள தண்ணீரில், இடுப்பில் ஒரு ரப்பர் டியூபைக் கட்டிக் கொண்டு தனது டிபன் பாக்ஸ், ஷூ ஆகியவற்றை கையில் தூக்கிக் கொண்டு தினசரி காலை பள்ளிக்கூடத்திற்கு வருகிறார் இந்த ஆசிரியர். மாலையிலும் இதேபோல பயணம்.
அவரது பெயர் அப்துல் மாலிக். 40 வயதாகும் இவர், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருக்கிறார். 20 வருடமாக இந்தப் பள்ளிக்கூடத்தில் அவர் பணியாற்றுகிறாராம்.
ஏன் இந்த நீர்ப் பயணம்.. எதற்காக இப்படி ஒரு பயணம் என்று அவரிடம் கேட்டால், பஸ்சில் வந்தால் 12 கிலோமீட்டர் சுத்தி வரனும். அதற்குள் பள்ளிக்கூடத்திற்கு நேரமாகி விடும். எனவேதான் நீ்ச்சலடித்து வருகிறேன். இது சுலபமானதும் கூட, சீக்கிரமும் வந்து விடலாம். பள்ளிக்கூடத்திற்கு நேரத்திற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி வருகிறேன் என்கிறார்.
ஆற்றைக் கடந்து வந்த பின்னர் முதலி்ல தனது துணிகளைக் காய வைக்கிறார். அதன் பிறகு மலையேற்றம் ஆரம்பிக்கும்... ஆமாம், அங்கிருந்து கால் மணி நேரம் ஒரு மலைப் பகுதியில் நடந்தால்தான் பள்ளிக்குப் போக முடியும்.
இவர் ஒரு சாதாரண அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர். இவருக்கு சம்பளம் ரூ. 25,000. ஆனால் இவர் செய்யும் பணிகளும், காட்டும் அக்கறையும், ஈடுபாடும் இதை விட பல மடங்கு சம்பளத்திற்குச் சமமானதாகும்.
இன்று ஆசிரியர் தினம் என்பதால் மாலிக்கைச் சுற்றிச் சூழ்ந்த மாணவர்கள் மலர் கொத்து, இனிப்புகளை வழங்கி அவருக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மாலிக் முகம் அந்த ஈரத்திலும் புன்னகையில் மலர்ந்தது.
இவர் தான் மட்டும் நீச்சலடிப்பதோடு நிற்பதில்லை. மாணவர்களுக்கும் கற்றுத் தருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நிறையப் பேசுகிறார். நீர் சேமிப்பு குறித்து பாடம் சொல்லித் தருகிறார். சாதாரண ஆசிரியராக இவர் இல்லை.












Click it and Unblock the Notifications