பேராசிரியர் திட்டியதால் அவமானம்: கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு
கோவை: வால்பாறையில், பேராசிரியர் திட்டியதால் அவமானமடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சோலையாறு சின்கோனா பகுதியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு. கூலி தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை. இவர்களது மகள் சங்கீதா (வயது 18).
இவர் வால்பாறையில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை 4 மணிக்கு கல்லூரி முடிந்ததும் சங்கீதா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் ஆண் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டே சென்றதாக தெரிகிறது. இதனை பார்த்த பேராசிரியர் ஒருவர் சங்கீதாவை கண்டித்துள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவமானம் அடைந்த சங்கீதா நேராக வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ மளமளவென பிடித்து எரிந்தது. வலி தாங்க முடியாமல் சங்கீதா சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைத்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சங்கீதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை சங்கீதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வால்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மாணவி தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மகளின் மரணத்திற்கு காரணமான பேராசிரியரை தண்டிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை வலியுறுத்தியுள்ளார்.