குஜராத் கோவிலில் ஆசாராம் பாபுவின் படங்கள் நீக்கம்
சூரத்: குஜராத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சாமியார் ஆசாராம் பாபுவின் படங்களை கிராம மக்கள் கும்பலாக வந்து நீக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசாராம் பாபு மீது தொடர்ந்து புகார்கள் குவிவதாலும், குற்றச்சாட்டுக்கள் மோசமாக இருப்பதாலும் கிராம மக்கள் இந்த நடவடிக்கையில் இறங்கினர்.
சூரத் மாவட்டம் பர்தோலி அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் திரளாக தாஜ்பூர் என்ற கிராமத்திற்கு வந்தனர். அங்குள்ள பழமையான வைஜ்நாத் மகாதேவ் சிவன் கோவிலுக்கு வந்தனர். கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஆசாராமின் புகைப்படங்களை தூக்கி வெளியே போட்டனர். பின்னர் கோவிலில் தங்கியிருந்த ஆசாராமின் ஆதரவாளர்களும் ஊர் மக்களால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்தப் படங்களை நீக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் கோவிலுக்குள் தங்கியிருந்த ஆசாராமின் ஆதரவாளர்கள் அதை நீக்க மறுத்து வந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்து ஊர் மக்களைத் திரட்டி உள்ளூர் மக்கள் படம் எடுக்கும் போராட்டத்தில் குதித்தனர்.
ஆசாராமின் ஆசிரமத்திற்கு சற்று அருகில்தான் தாஜ்பூர் கிராமம் உள்ளது குறிப்பிடத்தக்கது.