இஸ்ரேலுக்கு எதிராக பறந்த கண்டம்.. ஐக்கிய அரபு அமீரகம் எடுத்த முக்கிய மூவ்! பாலஸ்தீனம் தப்புமா?
அபுதாபி: காசா மீது 25வது நாளாக இஸ்ரேல் தனது கொடூரமான தாக்குதலை நீடித்து வரும் நிலையில், இதற்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் குரலெழுப்பியுள்ளது. உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் எழுவது இயல்பானதுதான். இப்படி இருக்கையில் 2011க்கு பின்னர் எந்த மோதல் போக்கும் எழவில்லை. ஆனால் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக ஹமாஸ் படையினர் காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்கு இப்படியான அச்சுறுத்தல் இருப்பது ஏற்கெனவே தெரியும். எனவே அது தனது பாதுகாப்புக்காக 'அயன் டோம்' அமைப்பை உருவாக்கி வைத்திருந்தது. சோகம் என்னவெனில் இந்த வலுவான தடுப்பையும் மீறி ஹமாஸ் ஏவிய ராக்கெட்கள் இஸ்ரேலுக்குள் பாய்ந்தது. இதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கான பதில் தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப்படை தொடங்கியுள்ளது. ஹமாஸை அழிப்பதாக கூறி கடந்த 24 நாட்களாக இஸ்ரேல் விமானப்படை கடுமையான தாக்குதலை தொடுத்து வந்தது. 25வது நாளாக இன்றும் இது நீடிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் 8,306 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த 26ம் தேதி வரை வான் வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் அதன் பின்னர் தரைவழி ஊடுருவலை தொடங்கியது. போர் தீவிரமடைந்த நிலையில் சமாதான பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின.
இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும், சீனாவும் தீர்மானங்களை முன்வைத்தன. ஆனால் இந்த தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்துவிட்டது. இதன்பின்னர் கடந்த 25ம் தேதியன்று நடைபெற்ற ஐநா பொதுக்குழு கூட்டத்தில் போர் நிறுத்தம் குறித்து ஜோர்டன் சார்பில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதன் மீது மொத்தமுள்ள 195 நாடுகளும் தங்கள் கருத்தை பதிவு செய்தன. அதில் 14 நாடுகள் எதிராகவும், இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்திற்கு வாக்களிக்காமலும் புறக்கணித்தன. மற்ற நாடுகள் வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் தற்போது வலியுறுத்தியுள்ளது. கடந்த 27ம் தேதி வரை வான்வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலில் மும்முரமாக இறங்கியுள்ளது. பொதுமக்களின் கார்களை பீரங்கி கொண்டு சுட்டு வீழ்த்துவதை போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இது இஸ்ரேலின் கொடூர முகத்தை காட்டுவதாக பாலஸ்தீன ஆதரவு நாடுகள் விமர்சித்துள்ளன. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக சாடியுள்ளது.

"இஸ்ரேலின் ராணுவ விரிவாக்கம் மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறோம். பொது மக்கள் மீதும், பொது சொத்துக்கள் மீதும் ராணுவம் குறி வைக்காமல் இருக்கப்படுவதை உறுதி செய்ய போர் நிறுத்தம் அமலுக்கு வரவேண்டும். தற்போதைய சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பொதுமக்களின் பாதுகாப்பை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளது. அரபு நாடுகளை பொறுத்த அளவில் அவற்றில் எதுவும் இஸ்ரேலை இதுவரை ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை. ஐக்கிய அரபு அமீரகம்தான் இதனை முதன் முதலில் ஒரு நாடாக அங்கீகரித்த முதல் அரபு நாடாகும். இப்படி இருக்கையில், இந்நாடு இஸ்ரேலுக்கு எதிராக பேசியிருப்பது மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications