”ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை..” கங்கைகொண்ட சோழபுரத்தில் அறிவித்த மோடி
அரியலூர்: 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழன் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது ராஜராஜ சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்டமாக சிலை அமைக்கப்படும் என்று கூறினார்.
2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, நேற்று தூத்துக்குடியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.462 கோடியில் புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தையும் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து இன்று காலையில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.

தமிழில் பேசிய மோடி
அப்போது சோழகங்கத்தில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் வரை 3.8 கிமீ தூரம் பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொண்டார். தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். வாரணாசியில் இருந்து கொண்டு வந்த கங்கை நீரை சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய கொடுத்தார்.
இதனை தொடர்ந்து ராஜராஜ சோழன் முப்பெரும் விழாவானது இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியோடு தொடங்கியது. இசை நிகழ்ச்சி முடிந்த பிறகு பேசிய பிரதமர் மோடி, வணக்கம் சோழமண்டலம் என்று தமிழில் பேசி உரையை தொடங்கினார். பிரதமர் மோடி பேசியதாவது:-
பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்
நம்முடைய பாரம்பரியத்தின் மீது பெருமித உணர்வை முன்னெடுக்கும் வேளையில், இங்கு மேலும் ஒரு உறுதிப்பாட்டை நான் அளிக்கிறேன். வரவிருக்கும் கால கட்டத்திலே நம் தமிழ்நாட்டில் ராஜ ராஜ சோழன் அவருடைய மைந்தன் மகத்தான ஆட்சியாளர் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்டமான சிலையை அமைப்போம். இந்த உருவச்சிலைகள் நமது வரலாற்று விழிப்புணர்வின் நவீன கொடிமரங்கள் ஆகும்.
ஜனநாயகத்தின் தாய் சோழராட்சி.. சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம்.. சைவ சித்தாந்தம் தீர்வளிக்கும் பாதை, அன்பே சிவம்.. இவ்வாறு மோடி கூறினார். மேலும் பிரதமர் மோடி பேசியதாவது:-
எனக்கு கிடைத்த பெரும் பேறு..
சோழர்கள் குறித்த கண்காட்சியை பார்த்து வியந்து போனேன்.. அனைவரும் இந்த கண்காட்சியை பார்வையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.. 140 கோடி மக்களின் வளர்ச்சிக்காக நான் எனது வேண்டுதலை சிவனிடம் வைத்துள்ளேன். 1000 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இறைவனை தரிசித்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெரும் பேறு..
நம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று
சோழ மன்னர்களின் அரசியல் மற்றும் வணிக தொடர்பு என்பது மாலத்தீவு தொடங்கி, கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரந்து விரிந்து இருந்தது. சோழர்களுடைய சாதனைகளானது இந்தியாவுடைய பலத்திற்கு எடுத்துக்காட்டு. நம் இந்திய பாரதத்தின் அடையாளங்கள் ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆகிய இரு பெயர்கள்.
பிரிட்டிஷார் இல்லை.. நம் ஜனநாயகத்துக்கான முன்னோடி சோழராட்சி தான். ஜனநாயகத்தின் பிறப்பிடமாய் சோழர்களின் குடவோலை முறை திகழ்ந்தது. நீர் மேலாண்மையில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் சோழர்கள். சோழ சாம்ராஜ்ஜியம் நம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று.. நாட்டின் புது நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி ஒலித்தது. தமிழர் கலாச்சாரத்தோடு இணைந்த செங்கோலானது நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications