துண்டான தலை.. பஸ் ஜன்னல் வழியாக எச்சில் உமிழ முயன்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கதி.. உஷார் மக்களே
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு பஸ்சில் பயணித்த கல்லூரி மாணவர் ஜன்னல் வழியாக எச்சில் உமிழ வெளியே தலையை நீட்டினார். அப்போது பஸ்சை முந்துவதற்காக பின்னால் வந்து கொண்டிருந்த லாரி அவரது தலையில் மோதியது. இதில் கல்லூரி மாணவர் தலை துண்டாகி துடிதுடித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஸ், கார், ரயில்களில் பயணிக்கும்போது நாம் செய்யும் சிறு தவறு நமது உயிரையே காவு வாங்கிவிடும். குறிப்பாக ஜன்னல் வழியாக எட்டிப்பார்ப்பது, கதவை சரியாக மூடாமல் இருப்பது அல்லது கதவை திடீரென்று திறக்கும்போது விபத்தில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்நிலையில்தான் ஓடும் பஸ்சில் எச்சில் உமிழ ஜன்னல் வழியாக முயன்ற கல்லூரி மாணவர் ஒருவரின் தலை துண்டாகி பலியான சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா சிரூர் கிராமத்தை சேர்ந்தவர் பக்கரேஷ் (வயது 17). இவர் உப்பள்ளியில் உள்ள ஐடிஐ கல்லூரியில் படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில்தான் கல்லூரி முடிந்த பிறகு பக்கரேஷ் உப்பள்ளியில் இருந்து கேஎஸ்ஆர்டிசி அரசு பஸ்சில் ஏறினார். அவர் லட்சுமேஷ்வர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
லட்சுமேஷ்வர் பிரதான சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. பக்கரேஷ் பஸ்சின் ஜன்னல் அருகே உள்ள சீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் எச்சில் உமிழ்வதற்காக பஸ் ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டினார். அப்போது பஸ்சின் பின்புறம் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி பஸ்சை முந்தி செல்ல முயன்றது. வேகமாக லாரி முந்த முயன்றபோது பக்கரேஷ் தனது தலையை பஸ் ஜன்னல் வழியாக வெளியே நீட்டினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் லாரியை நிறுத்த முயன்றார். ஆனால் லாரியை உடனடியாக நிறுத்த முடியவில்லை.
இதனால் லாரி பக்கரேஷின் தலையில் மோதியது. இதில் அவரது தலை துண்டாகி கீழே விழுந்தது. ஜன்னலில் அவரது உடல் தொங்க தலையின்றி ரத்தம் சொட்ட சொட்ட பக்கரேஷ் துடிதுடித்து இறந்தார். இதை பார்த்த பயணிகள் அலறினர். பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பக்கரேஷின் தலை ரோட்டில் கிடக்க அவரது உடல் மட்டும் பஸ் ஜன்னலில் தொங்கியபடி இருக்கையில் கிடந்தது.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பக்கரேஷின் தலை, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. பஸ் டிரைவர் மஞ்சுநாத் மற்றும் லாரி டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி கர்நாடகாவின் வடமேற்கு போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனர் பிரியங்கா கூறுகையில், ''இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பயணிகளின் பாதுகாப்பு முக்கியம் என்று எங்கள் ஊழியர்களிடம் நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.
பயணிகள் பயணம் செய்யும்போது ஜன்னலுக்கு வெளியே கைகளையும், தலையையும் நீட்டாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊழியர்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. இதில் பஸ் டிரைவர் அலட்சியமாக செயல்பட்டது தெரியவந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications