கொரோனா தனிமை முகாம்களுக்கு செல்ல மறுப்பு- பெங்களூரு வந்த 19 பயணிகள் சொந்த ஊர் திரும்பினர்
பெங்களூர்: பெங்களூருவுக்கு ரயில் மூலம் வந்த 19 பயணிகள், கொரோனா பரிசோதனைக்கான தனிமைப்படுத்துதல் முகாம்களுக்கு செல்ல மறுத்து சொந்த ஊர் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் இருந்து 543 பயணிகளுடன் சிறப்பு ரயில் மே 12-ந் தேதி பெங்களூருவுக்குப் புறப்பட்டது. இந்த ரயில் நேற்று காலை பெங்களூருவை வந்தடைந்தது. லாக்டவுன் காலத்தில் பெங்களூருவுக்கு வந்த முதலாவது பயணிகள் ரயில் இது.

முதலில் ரயில் பயணிகள் அனைவருக்கும் உடலின் வெப்பநிலை எவ்வளவு என்பது குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது. இதனை அடுத்து பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் தொடர்பாக விவரிக்கப்பட்டது.
அப்போது அரசின் தனிமைப்படுத்துதல் முகாம்களில் 14 நாட்கள் தங்களால் தங்கி இருக்க முடியாது என 140 பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதற்கு பதிலாக தங்களை வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுங்கள் எனவும் அந்த பயணிகள் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் பெரும்பாலான பயணிகள் சமாதானமடைந்தனர். மொத்தம் 19 பயணிகள் மட்டும் இதனை ஏற்காமல் தாங்கள் சொந்த ஊர் திரும்புவதாக தெரிவித்தனர்.
12 பேர் செகந்திராபாத்துக்கும் 2 பேர் குண்டக்கல், 4 பேர் அனந்தபூருக்கும் ஒருவர் டெல்லிக்கும் திரும்புவதாக கூறினர். இதற்கான ஏற்பாடுகளையும் பெங்களூரு அதிகாரிகள் மேற்கொண்டனர். பெங்களூருவில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட ராஜதானி ரயிலில் இந்த 19 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.












Click it and Unblock the Notifications