பெங்களூரில் இதுவரை இல்லாத குளிர்.. 8.5 டிகிரி செல்சியஸ்க்கு சரிந்த வெப்பநிலை.. மக்கள் கடும் அவதி
பெங்களூர்: பெங்களூர் நகரில் வழக்கம்போல் டிசம்பர் மாதத்தில் குளிர் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பெங்களூர் முதல் பீதர் வரை தினமும் வெப்பநிலை சரிந்து வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூர் நகரின் வெப்பநிலை 8.5 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளதாக கர்நாடகா மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் குளிர் அதிகரிக்கும். இந்த ஆண்டும் அப்படித்தான். நவம்பர் மாத இறுதியில் இருந்தே பெங்களூரில் குளிர் அதிகரிக்க தொடங்கியது. பெங்களூர் நகரில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் நாளுக்கு நாள் குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

பெங்களூர் நகர் முழுவதும் அதிகாலையில் அடர் பனிமூட்டம் நிலவி வருகிறது. பெங்களூர் மட்டுமின்றி பெங்களூர் புறநகர் மாவட்டத்திலும் இதே நிலை தான் நீடித்து வருகிறது. இதனால் அதிகாலையில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் இதுவரை இல்லாத அளவுக்கு பெங்களூர் நகரின் வெப்பநிலை குறைந்துள்ளது. பெங்களூரில் நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.5 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது என்றும், புறநகர் பகுதிகளின் வெப்பநிலை 8.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி உள்ளது என்று கர்நாடகா மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் (KSNDMC) தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாதத்தில் இன்னும் குளிர் குறையும். இந்த மாதம் இறுதி வரை பொதுமக்களை குளிர் வாட்டி வதைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை பெங்களூர் வானிலை ஆய்வு மையம் மறுத்துள்ளது. பெங்களூர் அரண்மனை மைதானத்தின் வெப்பநிலை 14.4 டிகிரி செல்சியஸாகவும், எச்ஏஎல் விமான நிலையத்தின் வெப்பநிலை 14.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி உள்ளது. இதுதான் பெங்களூர் நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 2 ஏஜென்சிகளுக்கு இடையேயான பெங்களூரு நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை கணக்கீட்டில் நிறைய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இதுவும் விவாதத்தை கிளப்பி உள்ளது.
இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில், ‛‛பெங்களூர் நகரில் தொடர்ந்து வானம் தெளிவாக காட்சியளிக்கிறது. இதனால் நகரின் குளிர் மற்றும் பனிமூட்டம் அதிகாலையில் தொடர்ந்து இருக்கும். பெங்களூரை ஒப்பிடும்போது பெங்களூர் புறநகர் பகுதிகளில் குளிர் கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் வரை சரியாலாம். அதேவேளையில் பெங்களூர் நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் மதல் 13 டிகிரி செல்சியஸாக நீடிக்க வாய்ப்புள்ளது'' என்று கூறியுள்ளது.
இந்த குளிர் காரணமாக பெங்களூரில் உள்ள மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை முதல் காலை 9.30 மணி வரை பொதுமக்கள் வாகனம் ஓட்டுவதில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குளிரை தாங்கும் உடைகளை அணிந்து சாலைகளில் பயணிப்பை காண முடிகிறது.
அதேபோல் வடகர்நாடகா மாவட்டங்களிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. கர்நாடகா மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் அறிக்கையின்படி பீதரில் வெள்ளிக்கிழமை இரவு 5.3 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை குறைந்தது. அதேபோல் பெலகாவியில் 5.9 டிகிரி செல்சியஸாக சரிந்தது. தார்வாரில் 6.5 டிகிரி செல்சியஸாக சரிந்து இருந்தது.
மேலும் விஜயநகர், விஜயாபா்புரா, பாகல்கோட்டை, கதக், ஹாவேரி, கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் 6.5 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸாக குறைந்தபட்ச வெப்பநிலை சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளிலும் வரும் நாட்களில் குளிர் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications