கர்நாடகா: 8 முறை வென்ற எம்.எல்.ஏ. டிகே சிவகுமார்.. முதல்வர் அரியாசனம் கிடைக்குமா?
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் வென்ற காங்கிரஸுக்கு முதல் அக்னி பரீட்சையாக இருப்பது முதல்வரை தேர்ந்தெடுப்பதுதான்.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 136 இடங்களில் அபார வெற்றியை பெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

இன்றைய கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார். தற்போதைய நிலையில் முதல்வர் பதாவிக்கான போட்டியில் சித்தராமையா, டிகே சிவகுமார், எம்பி பாட்டீல் மற்றும் பரமேஸ்வரா ஆகியோர் உள்ளனர். ஆகையால் வாக்கெடுப்பு முறையில் முதல்வரை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
கர்நாடகா முதல்வர் பதவிக்கு சித்தராமையா பெயர் பொதுவாக அடிபடுவது இயல்பு. ஒட்டுமொத்த கன்னட மக்களிடம் செல்வாக்கு பெற்றவராக சித்தராமையா இருப்பதால் அவரது பெயர் அடிபடுகிறது. அதற்கு அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்புக்குரியவர் டிகே சிவகுமார்.
1962-ம் ஆண்டு மே 15-ந் தேதி கனகபுராவில் தொட்டலஹல்லி கெம்பே கவுடா, கவுரம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் டிகே சிவகுமார். கர்நாடகாவில் 2-வது பெரும்பான்மை சமூகமான- ஜாதியான ஒக்கலிகா கவுடாவை சேர்ந்தவர் டிகே சிவகுமார். முதலாவது பெரும்பான்மை ஜாதி லிங்காயத்துகள்.
1980களில் மாணவர் பருவத்தில் காங்கிரஸில் இணைந்து டிகே சிவகுமாரின் அரசியல் பயனம் தொடங்கியது. தமது 27 வயதில் 1989-ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். மைசூரு மாவட்டத்தின் சாத்தனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் 1994, 1999, 2004 தேர்தல்களிலும் சாத்தனூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக வாகை சூடினார். 2008, 2013, 2018 மற்றும் தற்பொதைய தேர்தல்களில் கனகபுரா தொகுதியில் போட்டிட்யிட்டு மகுடம் சூட்டி இருக்கிறார்.

2002-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசுக்கு சிக்கல் ஏற்பட்ட போது எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்து அரசாங்கத்தை காப்பாற்றிய போது டிகே சிவகுமார் பெரிதும் உச்சரிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலின் போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாத்தவர் டிகே சிவகுமார். கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்க்கப்பட்ட போது எம்.எல்.ஏக்களுக்காக மும்பையில் மல்லுக்கட்டியவர் டிகே சிவகுமார். தமது சொத்து ரூ1413 கோடி என பகிரங்கமாக அறிவித்தவர். 2020-ம் ஆண்டு முதல் கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்து வருகிறார். மத்திய விசாரணை ஏஜென்சிகள் அனைத்தும் டிகே சிவகுமார் மீது வழக்குகள் போட்டுள்ளன. 2019-ம் ஆண்டு அமலாக்கத்துறையால் டிகே சிவகுமார் கைதும் செய்யப்பட்டார்.
இத்தகைய நெடும் பயணத்தை மேற்கொண்ட டிகே சிவகுமார் இப்போது முதல்வர் நாற்காலியை நோக்கிய ரேஸில் ஓடிக் கொண்டிருக்கிறார்.. அரியாசனம் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications