அண்ணாமலைக்குள் ஒரு நித்யானந்தா! விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல பாருங்க.. நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டல்
பெங்களூர்: கர்நாடகாவில் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் 2024ம் ஆண்டுக்குள் சண்டையிட்டு கொள்வார்கள். காங்கிரஸ் அரசு ஓராண்டில் சீட்டு கட்டுபோல் சரிந்துவிழும் எனக்கூறிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடியோ வேகமாக பரவும் நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டலடித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அங்குள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களில் வெற்றி பெற்றால் தனித்து ஆட்சியமைக்கலாம். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்றது.

மாறாக பாஜக 66 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இந்த தேர்தலில் ஜேடிஎஸ் 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வென்றுள்ளனர். இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் நேற்று பதவியேற்றனர். மேலும் 8 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில் தான் சென்னையில் நேற்று அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்தார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவின் தேர்தல் இணை பொறுப்பாளராக அவர் செயல்பட்ட நிலையில் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றது. இதுபற்றி அண்ணாமலை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
கர்நாடகாவில் சித்தராமையா இரண்டரை ஆண்டுகளும், டிகே சிவக்குமார் இரண்டரை ஆண்டுகளும் முதல்வர்களாக ஆட்சி செய்ய போகிறார்களாம். மேலும் சித்தராமையா, டிகே சிவக்குமார், மல்லிகார்ஜூன கார்கே கட்டுப்பாட்டில் தலா 10 அமைச்சர்கள் செயல்படுவார்களாம். இத்தகைய கட்டமைப்பு எங்காவது உண்டா?. கர்நாடகாவில் 3 முதலமைச்சர்கள் உள்ளனர்.
இதனால் கர்நாடகா உள்ள காங்கிரஸ் அரசு அடுத்த ஒரு வருடத்தில் சீட்டு கட்டுபோல் சரிந்துவிடும். டிகே சிவகுமாரும் சித்தராமையாவும் 2024க்குள் சண்டையிடாவிட்டால் இருவருக்கும் 2024ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கிடலாம். ஏனெனில் 100 சதவீதம் மோதல் இவர்களுக்குள் வரும். ஏனெனில் அப்படித்தான் கட்டமைப்பு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியிலேயே ஒற்றுமை என்பது இல்லை. இதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது கஷ்டம்'' என்றார்.

இந்த வீடியோ ஏஎன்ஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. இதனை பார்த்த நடிகர் பிரகாஷ் ராஜ் அண்ணாமலையை கிண்டல் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ஐபிஎஸ்ஸாக இருந்தாலும் அவருக்குள்ளே ஒரு நித்யானந்தா இருக்கிறார். மக்கள் ஒதுக்கி தள்ளியதில் கீழே விழுந்தாலும் கூட மீசையில் மண் ஒட்டவில்லை எனக்கூறுவது முட்டாள்த்தனமானது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications