கர்நாடகாவில் விநாயகர் சிலைகளுக்கு எத்தனை சோதனை! போலீஸ் 'கைதை' தொடர்ந்து 'ஆட்டைய' போட்ட திருடர்கள்!
பெங்களூர்: கர்நாடகாவில் விநாயகர் சிலைகளுக்கு மிகப் பெரும் சோதனை காலமாகிவிட்டது. கர்நாடகாவின் மண்டியா நாகமங்களாவில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட போது மோதல் வெடித்ததால் விநாயகர் சிலையை போலீசார் 'கைது' செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனை பிரதமர் மோடியும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது மண்டியா அருகே மத்தூரில் ஒரு கும்பல் இரவோடு இரவாக விநாயகர் சிலையை திருடிச் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தெருக்களில் வைக்கப்பட்டு ஒரு வார வழிபாட்டுக்குப் பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வுகளின் போது பல மாநிலங்களில் மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

கர்நாடகா மாநிலம் மண்டியா நாகமங்களாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வின் போது இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதல் மிகப் பெரும் வன்முறையாக உருவெடுத்தது. இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அங்கு ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. அப்போது தெருவில் கைவிடப்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் வாகனங்களில் எடுத்துச் சென்றனர். இதனால் விநாயகர் சிலைகளை போலீசார் கைது செய்துவிட்டதாக பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தற்போது இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாக்மங்களா பதற்றம் ஓய்வதற்குள் மண்டியாவின் மாத்தூர் அருகே சோம்பூர் கிராமத்தில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சோம்பூர் கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வந்தனர். இந்த விநாயகர் சிலையை கரைக்கவும் தயாராக இருந்தனர் அந்த கிராமத்து இளைஞர்கள். ஆனால் இரவோடு இரவாக மூன்றரை அடி உயர விநாயகர் சிலையை ஒரு கும்பல் திருடிச் சென்றுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சோம்பூர் கிராம இளைஞர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். காணாமல் போன விநாயகர் சிலையை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications