ஆரோக்கியமான முதுமைக்கு யோகா.. கிறிஸ்து ஜெயந்தி பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்!
பெங்களூர்: வரும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு, பெங்களூரில் உள்ள கிறிஸ்து ஜெயந்தி பல்கலைக்கழகம், ஸ்ரீ ஸ்ரீ ஸ்கூல் ஆஃப் யோகா மற்றும் 'தி ஆர்ட் ஆஃப் லிவிங்' (The Art of Living) அமைப்புடன் இணைந்து, "ஆரோக்கியமான முதுமைக்கான யோகா" (Yoga for Healthy Ageing) என்ற சிறப்பு தீம் உடன் 12-வது ஆண்டு சர்வதேச யோகா தின நலவாழ்வு திட்டத்தை கொண்டாடியுள்ளது.
கிறிஸ்து ஜெயந்தி நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மத்திய வளாகத்தில் உள்ள 'யோகா மற்றும் நலவாழ்வு மையம்' மற்றும் 'ஜெயந்தியன் எக்ஸ்டென்ஷன் சர்வீசஸ்' (JES) ஆகியவற்றால் இந்த நிகழ்ச்சி கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாணவர்கள், பேராசிரியர்கள், நலவாழ்வு நிபுணர்கள் மற்றும் யோகா ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு, நீண்ட கால உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான நல்வாழ்வை மேம்படுத்துவதில் யோகாவின் பங்கு குறித்து கலந்துரையாடினர்.

சிறப்பு விருந்தினர்கள்
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்கூல் ஆஃப் யோகாவின் முதன்மை நிபுணர்கள் மற்றும் புகழ்பெற்ற பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். பெங்களூர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்கூல் ஆஃப் யோகா, தி ஆர்ட் ஆஃப் லிவிங் சர்வதேச மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனர், வசந்தி எஸ். ஐயர், ஸ்ரீ ஸ்ரீ யோகா ஸ்கூல் ஆஃப் யோகா, தி ஆர்ட் ஆஃப் லிவிங் சர்வதேச மையத்தின் கார்ப்பரேட் மற்றும் அரசு யோகா திட்டங்கள் பிரிவு தலைவர் ருத்ரேஷ் குமார் சிங் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பேசிய நிபுணர்கள், நவீன அறிவியல் ஆராய்ச்சிகளின் ஆதரவோடு விளங்கும் பாரம்பரிய யோகா பயிற்சிகள், ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான முதுமையை உறுதி செய்வதில் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை விளக்கினர். மேலும், வருமுன் காக்கும் ஆரோக்கியம், மன அழுத்த மேலாண்மை, உடல் இயக்கம், மன உறுதி மற்றும் ஆயுளை நீட்டிக்கும் வாழ்க்கை முறை தேர்வுகள் குறித்தும் அவர்கள் விரிவாக கலந்துரையாடினர்.

கூட்டு யோகா பயிற்சி
இந்த நிகழ்வின் முக்கிய அங்கமாக ஒரு பிரம்மாண்ட கூட்டு யோகா பயிற்சியும் நடைபெற்றது. இதில் பங்கேற்பாளர்கள் உடல் சமநிலை, சீரான சுவாசம் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட யோகா முறைகளைச் செய்து பழகினர். இந்த யோகா பயிற்சிகள் முதியவர்களுக்கு மட்டுமல்லாமல், நிலையான ஆரோக்கியத்தை நாடும் இளைய தலைமுறையினருக்கும் அவசியமானது என வலியுறுத்தினர்.
வாழ்க்கை முறை
தற்போதைய காலகட்டத்தில் உலகளவில் வாழ்க்கை முறை சார்ந்த உடல்நல சவால்களும், முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் வேளையில், இந்த 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்ற தீம் பங்கேற்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. உடல் தகுதி, மனத்தெளிவு மற்றும் உணர்ச்சி சமநிலை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான கட்டமைப்பை யோகா வழங்குவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

வரும் ஜூன் 21 அன்று உலகளவில் கொண்டாடப்படவிருக்கும் 2026 சர்வதேச யோகா தினத்திற்கான ஒரு முன்னோட்டமாக இந்நகழ்வு அமைந்தது. இந்த ஆண்டின் உலகளாவிய முழக்கமான "ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா" (Yoga for One Earth, One Health) என்ற செய்தியை இது மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications