3 தொகுதி தாங்க.. பாஜகவிடம் கேட்கும் அதிமுக.. கர்நாடகா சட்டசபை தேர்தலில் களமிறங்க ஆர்வம்.. ஆஹா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதோடு, 3 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்படி அதிமுக பாஜகவிடம் கேட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் நடந்த 3 தேர்தல்களில் அதிமுக சார்பில் களமிறங்கிய வேட்பாளர்கள் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்ற நிலையில் தற்போது பாஜக உதவியுடன் கர்நாடகா சட்டசபையிலும் கால்பதிக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. 5 ஆண்டு முடியும் நிலையில் மீண்டும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே மாதம் 13ம் தேதி நடக்கிறது.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சிகள் இடையே தான் கடும் போட்டி உள்ளது. இதுதவிர இந்த தேர்தலில் ஆம்ஆத்மி, பகுஜன்சமாஜ், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், எஸ்டிபிஐ உள்பட பல கட்சிகள் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர் பட்டியல் வெளியிடாத பாஜக
தற்போது காங்கிரஸ் சார்பில் 124 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் சார்பில் 93 தொகுதிகளுக்கும் ஆம்ஆத்மி சார்பில் 140 தொகுதிளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. பாஜகவில் இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

பெங்களூர், கோலார் மாவட்டங்களில்..
இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் தங்களுக்கு 3 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய அதிமுக வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவை பொறுத்தமட்டில் பெங்களூர், கோலார், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக கோலார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் கோலார், கோலார் தங்கவயல், பெங்களூர் நகரில் காந்தி நகர், சாம்ராஜ்பேட்டை, சிவாஜிநகர், ராஜராஜேஸ்வரி நகர், சிவி ராமன் நகர், மகாதேவபுரா உள்ளிட்ட தொகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இதில் சிவாஜிநகர், காந்தி நகர், சாம்ராஜ்பேட்டை, சிவி ராமன் நகர் மற்றும் கேஜிஎப் எனும் கோலார் தங்கவயல் தொகுதிகளில் தமிழர்கள் தான் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர்கள்.

3 தொகுதிகளை கேட்கும் அதிமுக
இந்நிலையில் தான் தமிழர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் 3 இடங்களை அதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் அதிமுக, பாஜகவிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தில் பாஜக இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகா மாநில தேர்தல் இணை பொறுப்பாளராக உள்ளார். இதனால் இதுபற்றி அண்ணாமலையிடம் பேசி அடுத்தக்கட்ட முடிவை பாஜக மேலிடம் எடுக்கலாம் என கூறப்படுகிறது.

கர்நாடகா மாஜி அதிமுக எம்எல்ஏக்கள்
மேலும் கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஏற்கனவே அதிமுகவுக்கு எம்எல்ஏக்கள் இருந்துள்ளனர். கடந்த 1983, 1989, 1999 தேர்தல்களில் அதிமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். கேஜிஎப் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கிய பக்தவச்சலம் 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார். பெங்களூர் காந்தி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் முனியப்பா என்பவர் வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் அதிமுகவினர் வெற்றி பெற்று கவுன்சிலர்களாக இருந்துள்ளனர். இதனால் தற்போதும் கூட பெங்களூர், கேஜிஎப்பில் அதிமுகவுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இதனை மனதில் வைத்து தான் பாஜகவிடம் அக்கட்சி 3 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications