ஏர் இந்தியா விமானத்தில் திடீர் பரபரப்பு.. நடுவானில் விமானிகள் அறையில் நுழைய முயன்ற ஆசாமி! பகீர்
பெங்களூர்: ஏர் இந்தியா தொடர்பாகச் சமீப காலங்களாகவே வெளியாகும் செய்திகள் அந்த நிறுவனத்திற்கு நல்ல ஒரு இமேஜ்ஜை கொடுப்பதாகத் தெரியவில்லை. இப்போது மீண்டும் கிட்டத்தட்ட அப்படியொரு ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விமானிகள் இருக்கும் அறையைத் திடீரென ஒருவர் திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் இப்போது இருக்கும் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாக ஏர் இந்தியா இருக்கிறது. இருப்பினும், ஏர் இந்தியா குறித்து சமீப காலங்களாக வெளியாகும் செய்திகள் அந்த நிறுவனத்திற்கு நல்ல இமேஜ்ஜை உருவாக்குவதாக இல்லை. கடந்த ஜூன் மாதம் நடந்த ஏர் இந்தியா விபத்திற்குப் பிறகு அவ்வப்போது வெளியாகும் செய்திகள் பேசுபொருளாகியே வருகிறது.

ஷாக் சம்பவம்
இதற்கிடையே மீண்டும் அப்படியொரு சம்பவம் தான் ஏர் இந்தியா விமானத்தில் நடந்துள்ளது. கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணி ஒருவர், திடீரென விமானிகள் இருக்கும் காக்பிட்டை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த நபர் கழிப்பறைக்குச் செல்லவே முயன்றுள்ளார். இருப்பினும், அங்குக் கதவுகள் அனைத்தும் ஒரு மாதிரி இருந்ததால் அவர் குழம்பிவிட்டார்.
இதனால் கழிவறை கதவு என நினைத்து அவர் காக்பிட் கதவைத் திறந்திருக்கிறார். இந்தச் சம்பவத்தால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று திங்கள்கிழமை பெங்களூரில் இருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்திலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தால் பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இது தொடர்பாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காக்பிட்
விமானிகள் இருக்கும் ரூம், அதாவது காக்பிட், பகுதிக்குப் பயணிகள் யாரும் செல்ல முடியாது. விமானிகள் உள்ளே சென்று லாக் செய்த பிறகே விமானத்தை இயக்க ஆரம்பிப்பார்கள். அதன் பிறகு யார் நினைத்தாலும் காக்பிட்டை திறக்க முடியாது. விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவே இதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளே இருக்கும் விமானி தங்களிடம் இருக்கும் சீக்ரெட் கோட்டை பதிவிட்டால் மட்டுமே அந்தக் கதவு திறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா சொல்வது என்ன
ஐ.எக்ஸ்.1086 என்ற இந்த விமானம், இன்று காலை 8 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு, சுமார் 10.30 மணியளவில் வாரணாசி சென்றடைந்தது. அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்ததாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "வாரணாசிக்கு செல்லும் விமானம் ஒன்றில், கழிப்பறை தேடிச் சென்ற பயணி ஒருவர் விமானியின் அறை கதவுப் பகுதிக்குச் சென்றார்.
எங்களின் அனைத்து விமானங்களிலும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.. அவை எந்த வகையிலும் சமரசம் செய்யப்படவில்லை என்பதை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். விமானம் தரையிறங்கியதும் இந்த விஷயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.. தற்போது இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது"என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்முறை இல்லை
விமானங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறை இல்லை. கடந்தாண்டு ஜூன் மாதமும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அப்போது, கோழிக்கோட்டில் இருந்து பஹ்ரைன் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் கதவை 25 வயது இளைஞர் ஒருவர் திறக்க முயன்றார். இதையடுத்து விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, அந்த நபர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் விமானப் பணியாளர்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications