மதமாற்ற தடை சட்டத்துக்கு பெரும்பான்மையினர் ஆதரவு- யாருக்கும் அச்சம் வேண்டாம்- பசவராஜ் பொம்மை
பெங்களூரு: கர்நாடகா அரசு அமல்படுத்தப்பட இருக்கும் கட்டாய மதமாற்றத் தடை சட்டத்துக்கு பெரும்பான்மையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்; இச்சட்டம் குறித்து யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டின் வடமாநிலங்களில் கட்டாய மதமாற்றத் தடை சட்டம் அமலில் உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசும் இச்சட்டத்தை அமல்படுத்துவதில் முனைப்பாக உள்ளது.

பசவராஜ் பொம்மை நடவடிக்கை
இதன் முதல் கட்டமாக கட்டாய மதமாற்றம் தொடர்பான தகவல்களை சேகரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். அதேபோல் வட மாநிலங்களில் உள்ள கட்டாய மதமாற்ற தடை சட்டம் குறித்து ஆய்வு செய்யவும் சட்ட வல்லுநர்களை முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு கர்நாடகா காங்கிரஸ், கிறிஸ்தவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன் பெங்களூருவில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

சட்டசபையில் அறிமுகம்
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை சட்டசபையில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். பெலகாவியில் கர்நாடகா சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இம்மசோதா கொண்டுவரப்பட இருப்பதை அமைச்சர்களும் உறுதி செய்து பேட்டி அளித்து வருகின்றனர்.

பசவராஜ் பொம்மை விளக்கம்
இது தொடர்பாக தி பிரிண்ட் இணையதளத்துக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: மதமாற்றத் தடை சட்டம் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்காது. ஏனெனில் பெரும்பான்மை மக்கள் இந்த சட்டத்தை ஆதரிக்கின்றனர். நாங்கள் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க நினைக்கிறோம். ஏற்கனவே உ.பி., குஜராத், ம.பி. மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் இருக்கிறது. கர்நாடகாவில் மட்டுமே இச்சட்டம் கொண்டுவரப்படவில்லை.

அச்சம் வேண்டாமே..
கட்டாய மதமாற்றம் தொடர்பான பல புகார்கள் வந்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் அமைப்புகளை சந்தித்து இது தொடர்பாக ஆலோசித்தும் இருக்கிறேன். எந்த ஒரு மதத்துக்கும் எதிரானது அல்ல இந்த சட்டம் என விளக்கி இருக்கிறேன். பெரும்பான்மை சமூகத்தினர் இச்சட்டத்தை ஆதரிக்கின்றனர். கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களை மட்டும்தான் இச்சட்டம் தண்டிக்கும். ஆகையால் யாரும் அச்சப்பட வேண்டாம். கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications