மனைவியுடன் நெருக்கமான எலக்ட்ரீசியன்..வீட்டுக்கு வந்து சென்றதால் வந்த சந்தேகம்.. டிரைவர் செய்த செயல்
பெங்களூர்: பெங்களூரில் தனது மனைவியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவரை பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற எலக்டரீசியனை கார் டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் கோலாரை சேர்ந்தவர் சதீஷ் ரெட்டி. கார் டிரைவர். இவரது மனைவி பெயர் மீனாள். இவர்கள் 2 பேரும் பெங்களூர் வர்த்தூர் அருகே வீடு எடுத்து தங்கி இருந்தனர். அப்போது மீனாளுக்கும், சித்ரதுர்காவை சேர்ந்த எலக்ட்ரீசியனான கிஷோர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் நெருக்கமானது. அடிக்கடி கணவர் சதீஷ் ரெட்டி இல்லாத சமயத்தில் கிஷோர் அடிக்கடி வர்த்தூருக்கு வந்து மீனாளை சந்தித்து சென்றுள்ளார். இதுபற்றிய தகவல் சதீஷ் ரெட்டிக்கு தெரியவந்துள்ளது. இதனால் கிஷோர் - மீனாள் ஆகியோர் இடையே கள்ளத்தொடர்பு உள்ளதாக அவர் சந்தேகித்தார்.
இதனால் மனைவி மீனாளை கார் டிரைவர் சதீஷ் ரெட்டி கண்டித்தார். அதோடு கணவன் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது சதீஷ் ரெட்டி, மீனாளை அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோபமான மீனாள் கணவரை பிரிந்தார். அவர் தனது குழந்தைகள், தாயுடன் சேர்ந்து பெங்களூரில் வர்த்தூர் அருகே இன்னொரு வீட்டில் வாடகைக்கு வசிக்க தொடங்கினார்.
அப்போதும் கூட அடிக்கடி வீட்டுக்கு கிஷோர் வந்து சென்றுள்ளார். இதுபற்றி வீட்டு உரிமையாளர் கேட்டதற்கு கிஷோர் தனது தம்பி என்று மீனாள் கூறியுள்ளார். இதுபற்றி அறிந்த சதீஷ் ரெட்டிக்கு மீண்டும் கோபம் அதிகரித்தது. தனது மனைவியை தன்னிடம் இருந்து கிஷோர் பிரித்து விட்டதாக அவர் நினைத்ததோடு, இருவரும் தொடர்ந்து உறவில் இருப்பதாக நினைத்தார். அதோடு கிஷோரை கொலை செய்ய அவர் முடிவு செய்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் கத்தியை எடுத்து கொண்டு தனது மனைவி மீனாள் வசிக்கும் வீட்டு அருகே காத்திருந்தார். வீட்டுக்கு கிஷோர் வரும்போது அவரை கொலை செய்ய திட்டமிட்டு அவர் காத்து நின்றார். இரவு நேரம் வந்தது. அப்போது கிஷோர், மீனாளை பார்க்க வந்தார். அப்போது கிஷோருக்கும், சதீஷ் ரெட்டிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சதீஷ் ரெட்டி, கிஷோரை கத்தியால் குத்தினார்.
கிஷோர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் அந்த பகுதியில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின்படி வர்த்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கிஷோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சதீஷ் ரெட்டியை கைது செய்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் கிஷோர் பரிதாபமாக இறந்தார். கைதான சதீஷ் ரெட்டி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications